சிட்னி: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டை விடவும் ஸ்டாண்ட் அப் காமெடியில் மிகச்சிறந்த எதிர்காலம் இருப்பதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் சைமன் கேட்டிச் விமர்சித்துள்ளார். 38 வயதை எட்டவுள்ள டாப் ஆர்டர் வீரருக்கு டெஸ்ட் கிரிக்கெட் சரியான இடமல்ல என்றும் கூறியுள்ளார்.
2017ஆம் ஆண்டுக்கு பின் ஆஸ்திரேலியா அணி முதல்முறையாக பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றுள்ளது. ஆஸ்திரேலியா மண்ணில் தொடர்ந்து 2 முறை கோப்பையை வென்ற இந்திய அணி, இம்முறை 3-1 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக கேப்டன் ரோஹித் சர்மா அமைந்துள்ளார்.

ஏனென்றால் 5 இன்னிங்ஸில் விளையாடிய ரோஹித் சர்மா வெறும் 31 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். அதிலும் அவரின் அதிகபட்ச ஸ்கோராக 10 ரன்கள் மட்டுமே இருக்கிறது. இவருக்காக கேஎல் ராகுலின் பேட்டிங் வரிசையை மாற்றி, சுப்மன் கில்லை பெஞ்ச் செய்து இந்திய அணி சில தேவையில்லாத முடிவுகளையும் எடுத்தது.
இருப்பினும் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து ரோஹித் சர்மா தாமாக வெளியேறினார். இதனால் அவர் ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, திடீரென நான் எங்கும் போக போவதில்லை. மைக்கில் பேசுபவர்களோ, கிரிக்கெட் விமர்சகர்களோ, பத்திரிகையாளர்களோ என் ஓய்வு முடிவை எடுக்க முடியாது. அடுத்த 5 மாதங்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்று அதிர்ச்சி கொடுத்தார்.
அடுத்தடுத்து டெஸ்ட் தொடரில் வரலாற்று தோல்வியை சந்தித்த போதும், ரோஹித் சர்மா ஓய்வை அறிவிக்க முன் வராதது ரசிகர்களிடையே கடுமையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இதுகுறித்து ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் சைமன் கேட்டிச் பேசுகையில், ரோஹித் சர்மாவின் ஸ்கோரை பார்க்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது. சிட்னி டெஸ்டில் இருந்து அவராக விலகி, இளம் வீரருக்கு வாய்ப்பு கொடுத்தார்.
அதன்பின் அவர் அளித்த நேர்காணலை பார்க்க முடிந்தது. அதில் மிகச்சிறப்பாக பேசி இருந்தார். அந்த நேர்காணல் பார்த்த போது, ரோஹித் சர்மா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின், ஸ்டாண்ட் அப் காமெடியில் மிகச்சிறந்த எதிர்காலம் இருக்கிறது என்பதில் சந்தேகமே இருக்கவில்லை. அவ்வளவு நகைச்சுவை உணர்வுடன் பேசினார்.
அவரால் இன்னும் ரன்கள் அடிக்கும் பசியுடன் கிரிக்கெட்டை விளையாட முடியுமா என்பது அவருக்கு மட்டுமே தெரியும். ஏனென்றால் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவது எளிதாக இருக்காது. அதேபோல் இங்கிலாந்து அணியிலும் கூட சிறந்த இளம் பவுலர்கள் வந்துவிட்டனர். அட்கின்சன், கார்ஸ் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
ஒருவேளை ரோஹித் சர்மா விளையாட முடிவு செய்தால், அது கடினமான தொடராக அமையும் என்று அடித்து சொல்வேன். ரோஹித் சர்மா ஸ்டாட்ஸை பார்க்கும் போதே மோசமாக இருப்பது தெரிகிறது. 37 வயதாகும் டாப் ஆர்டர் வீரருக்கு டெஸ்ட் கிரிக்கெட் சரியான இடம் அல்ல. மீண்டும் சொல்கிறேன்.. அவருக்கு ரன்கள் அடிக்கும் பசி இருக்கிறதா என்பது ரோஹித் சர்மாவுக்கு மட்டுமே தெரியும் என்று விமர்சித்துள்ளார்.