சிட்னி: ஆஸ்திரேலியா மண்ணில் விளையாடும் போது அந்த அணியின் முதல் குறிக்கோள் எதிரணியின் கேப்டன் மீது ஆதிக்கம் செலுத்துவது தான் என்று முன்னாள் வீரர் கேரி ஓ கீஃப் தெரிவித்துள்ளார். அப்படிதான் ஆஸ்திரேலியாவின் தூண்டிலில் ரோஹித் சர்மா மாட்டிக் கொண்டதாக கூறிய அவர், ரஹானேவை மட்டும் எதுவும் செய்ய முடியவில்லை என்று பாராட்டியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது அந்த மண்ணில் அடையும் தோல்விகள் கேப்டன்களுக்கு மிகப்பெரிய நெருக்கடியை கொடுக்கும். 2014ஆம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக பயணித்த தோனி கூட, கடைசி போட்டிக்கு முன்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து வெளியேறினார். அப்படியான சம்பவங்கள் ஆஸ்திரேலியாவில் நடப்பது வழக்கம்.

தற்போது இந்திய அணி அடைந்துள்ள தோல்வி, கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது. 37 வயதாகும் அவர், ஃபார்மின்றி தவிப்பது ஒருபுறம் இருந்தாலும், ரசிகர்கள் கொடுக்கும் நெருக்கடியை எப்படி சமாளிப்பார் என்பதே கேள்வியாக உள்ளது. ஏனென்றால் நீண்ட ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுக்கு இவ்வளவு பெரிய நெருக்கடியை ரசிகர்கள் அளித்து வருகின்றனர்.
இதனிடையே ஆஸ்திரேலியா அணியின் வெற்றி திட்டம் குறித்து முன்னாள் வீரர் கேரி ஓ கீஃப் பேசுகையில், ஆஸ்திரேலியா அணியின் வெற்றி திட்டம் தொடங்கும் இடம் எதிரணியின் கேப்டன் தான். கடந்த முறை இந்திய அணி இங்கு வந்த போது ரஹானே கேப்டனாக இருந்தார். அவரை ஆஸ்திரேலியா அணியால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. கேப்டன்சியிலும், பேட்டிங்கில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அதன் பலனாக பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவுக்கு வந்த கேப்டன்கள் அனைவரும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியை சந்தித்துள்ளனர். ரோஹித் சர்மாவால் ரன்களும் குவிக்க முடியவில்லை, வெற்றிகளையும் பெற முடியவில்லை. பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத்திற்கும் அதே நிலைமை தான் இருந்தது.
இதனால் பாகிஸ்தான் 3-0 என்ற கணக்கில் வீழ்த்தப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை சமன் செய்த போது, பிராத்வெய்ட் கடைசி வரை ரன்கள் குவிக்க தடுமாறினார். நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்த போது, 2-0 என்று வென்றதோடு, டிம் சவுதியை கேப்டன்சியில் இருந்து விலக வைத்துவிட்டனர். அதேபோல் இம்முறை இந்திய அணியின் கேப்டன் பும்ராவை ஆஸ்திரேலியா வீரர்களால் அசைக்க முடியவில்லை.
ஆனால் கேப்டன்சி எப்போது ரோஹித் சர்மாவிடம் மாற்றப்பட்டதோ, உடனடியாக ஆஸ்திரேலியா அணியின் திட்டம் செயல்பட்டது. ஒரு கட்டம் வரை போராடிய ரோஹித் சர்மா, கடைசி டெஸ்டில் இருந்து விலகி கொண்டார். அது ஆஸ்திரேலியா அணி வீரர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுத்துவிட்டது. எதிரணியின் கேப்டன் மனதில் உள்ள நம்பிக்கை தகரும் போது, ஆஸ்திரேலியா அணி எளிதாக வெல்லும் என்று தெரிவித்துள்ளார்.