பிரிஸ்பேன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்த்து இருக்கிறது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி மீண்டும் பேட்டிங் செய்ய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. நான்கு நாட்கள் ஆட்டம் முடிவடைந்த நிலையில் நாளை புதன் கிழமை கடைசி நாள் ஆட்டம் இருக்கிறது.
இதிலும் மழை குறுக்கீடு போதிய வெளிச்சமின்மை இருக்கும் என்பதால் ஆட்டம் சமனில் முடிய அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய வீரர்கள் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ஆகாஷ் தீப் ஒரு அகலப் பந்தை வீசினார்.

இதை பார்த்ததும் கேப்டன் ரோகித் சர்மா கடுப்பாகி, அவரை உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா என ஹிந்தியில் கேட்டார். இது ஸ்டெம்ப் மைக்கில் பதிவானது. இந்த காட்சி சமூக வலைத்தளத்தில் நேற்று வைரலானது. இந்த நிலையில் ரோகித் சர்மாவின் இந்த பேச்சுக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தாலும் ஆகாஷ் தீப் பெரிய அளவில் அலட்டிக் கொள்ளாமல் சென்று விட்டார்.
ஆனால் இன்று இந்திய அணி இக்கட்டான நிலையில் இருந்தது. 213 ரன்களுக்கு 9 விக்கெட் விழுந்த நிலையில் ஃபாலோ ஆனை தவிர்க்க 33 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது காலத்தில் நின்ற ஆகாஷ் தீப், ஆஸ்திரேலியா வீரரின் பந்துவீச்சை கண்டு அஞ்சாமல் கட்டுக்கோப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
மறுபுறம் இந்திய அணியின் துணை கேப்டன் பும்ரா அபாரமாக களத்தில் நின்று ஆஸ்திரேலியா வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொண்டார்.இந்த ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 37 ரன்கள் சேர்த்தது. குறிப்பாக ஆகாஷ் தீப் 31 பந்துகளை எதிர் கொண்டு 27 ரன்கள் சேர்த்தார். இதில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும்.
ஆகாஷ் தீப்பின் அபார பேட்டிங்கால் இந்திய அணி தோல்வியை தழுவுவதில் இருந்து தற்போது மீண்டு டிராவை நோக்கி ஆட்டம் செல்கிறது. இந்த நிலையில் நேற்று கேப்டன் ரோகித் சர்மா ஆகாஷ் தீப்பை திட்டியதாகவும், அதற்கு ஆகாஷ் தீப் தன்னுடைய பேட்டிங் மூலம் ரோகித் சர்மாவின் முகத்தில் கரியை அள்ளி பூசி இருப்பதாகவும் ரசிகர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள். ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் பேட்டிங்கில் அடித்த ரன்களை விட இரண்டு மடங்கு ரன்கள் ஆகாஷ் தீப் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.