சிட்னி: இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 2027 உலகக்கோப்பை தொடர் வரை விளையாடும் முடிவில் இருப்பது தெரிய வந்துள்ளது. ஓய்வு பெறுவது தொடர்பான எந்த எண்ணமும் விராட் கோலியிடம் இல்லை என்று கூறப்படும் நிலையில், ஃபார்மின்றி தவிப்பதால் அவர் மீது தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் தங்கள் கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்தில் இருக்கின்றனர். நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா 92 ரன்களும், விராட் கோலி 93 ரன்களும் சேர்த்திருந்தனர். அதன்பின் ஆஸ்திரேலியா மண்ணில் விராட் கோலி 9 இன்னிங்ஸில் 190 ரன்களும், ரோஹித் சர்மா 5 இன்னிங்ஸில் 31 ரன்களும் எடுத்துள்ளனர்.

சீனியர் வீரர்களின் மோசமான செயல்பாடுகளால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இந்திய அணி இழந்துள்ளது. இதனால் அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சீசனை ஜூன் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருடன் இந்திய அணி தொடங்கவுள்ளது.
புதிய கேப்டனுக்கு கீழ் இந்திய அணி இளம் வீரர்களை கொண்டு கட்டமைக்கப்படும் என்று கருதப்படுகிறது. அந்த அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருக்கும் இடமிருக்காது என்று பார்க்கப்பட்டு வரும் சூழலில், அவர்கள் விரைவில் ஓய்வை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரோஹித் சர்மா இன்னும் 5 மாதங்களுக்கு பின்னர் என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்று கூறி இருக்கிறார்.
மறுபுறம் விராட் கோலி குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் பேசுகையில், அடுத்த 5 மாதங்களில் எந்த டெஸ்ட் தொடரும் இல்லாத நிலையில், தேர்வுக் குழுவினர் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரையும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்வது கடினமாக இருக்கும். ஏனென்றால் ஐபிஎல் ஃபார்மை வைத்து டெஸ்ட் போட்டிகளுக்கு யாரையும் சேர்க்க முடியாது.
ஆனால் விராட் கோலி ஓய்வு தொடர்பான எந்த முடிவையும் எடுக்கவில்லை. அவர் 2027 உலகக்கோப்பை தொடர் வரை விளையாடும் முடிவில் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இதனால் இந்திய அணி ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். விராட் கோலிக்கு 2012ஆம் ஆண்டு தான் கடைசியாக ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் விளையாடி இருக்கிறார்.
இம்மாதம் மீண்டும் ரஞ்சி டிராபி டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ள நிலையில், விராட் கோலி அதில் பங்கேற்று ஃபார்மை மீட்டெடுப்பாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அதேபோல் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரையும் ஒரே நேரத்தில் இந்திய அணியை விட்டு நீக்கும் முடிவுக்கு தேர்வு குழுவினர் வர மாட்டார்கள். ஏனென்றால் ஒரே நேரத்தில் மிகப்பெரிய விளம்பர வருவாயை இழக்க பிசிசிஐ தயாராக இருக்காது.
இதனால் 38 வயதாகும் ரோஹித் சர்மாவை முதலில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து நீக்கிவிட்டு, அடுத்த சில மாதங்களில் 36 வயதாகும் விராட் கோலி குறித்து முடிவு எடுக்கும் என்று விமர்சகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் விராட் கோலியின் டெக்னிக்கல் பிரச்சனையை சரி செய்யாமல் அவர் பேட்டிங் ஆடினால் எதிரணிகள் எளிதாக விக்கெட்டை வீழ்த்துவார்கள் என்பது உறுதியான விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.