பிரிஸ்பேன்: இந்திய அணியின் ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரின் கேப்டன்சியிலும் இருக்கும் வித்தியாசம் குறித்து ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் சைமன் கேடிச் பேசி இருக்கிறார். பும்ராவின் கேப்டன்சியில் பவுலர்களின் லைன் மற்றும் லெந்த் இரண்டும் மிகச்சரியாக இருந்ததாக கூறிய அவர், ரோஹித் சர்மா கேப்டன்சியில் பவுலர்களின் தவறு சுட்டிக்காட்டப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது. பெர்த் டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரிட் பும்ரா தலைமையிலான இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு படைத்தது. அதன்பின் அடிலெய்டு டெஸ்டில் ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்கிய இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது.

இதனால் ரசிகர்கள் பலரும் ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரிட் பும்ராவின் கேப்டன்சியை ஒப்பீடு செய்து விவாதித்து வந்தனர். ஏற்கனவே மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக அழுத்தத்தில் இருந்து வந்த ரோஹித் சர்மாவுக்கு, இந்த ஒப்பீடுகள் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல் கேஎல் ராகுலுக்காக தனது பேட்டிங் ஆர்டரையும் ரோஹித் சர்மா விட்டுக் கொடுத்து மிடில் ஆர்டரில் ஆடி இருக்கிறார்.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் சைமன் கேடிச் பேசுகையில், இதுவரை நடந்து முடிந்துள்ள 2 டெஸ்ட் போட்டிகளின் முடிவுகளையும் எடுத்து பார்த்தால், வித்தியாசமாக இருக்கும். பெர்த் டெஸ்டை ரோஹித் சர்மா மிஸ் செய்திருந்தார். ஆனால் பும்ராவின் கேப்டன்சியில் பவுலர்களின் லைன் மற்றும் லெந்த் மிகச்சிறப்பாக அமைந்தது. அடிலெய்டில் இந்திய பவுலர்களிடம் அதுதான் மிஸ்ஸானது.
பெர்த் டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் முடிவில் ஆஸ்திரேலியா அணி 67 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அதற்கு இந்திய பவுலர்கள் ஸ்டம்பை அட்டாக் செய்ததோடு, அதிகளவிலான ஃபுல்லர் லெந்தில் பவுலிங் செய்தது தான் காரணம். ஆனால் அடிலெய்டில் இந்திய பவுலர்களின் பிட்ச் மேப்பை பார்த்தால், அதிகளவில் ஷார்ட் மற்றும் ஒய்டு லெந்தில் பவுலிங் செய்திருக்கின்றனர்.
7 முதல் 8 மீட்டர் வரை லெந்தில் மாறியிருப்பது தான் சிக்கலாக அமைந்தது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஸ்லிப் திசையில் தான் ஃபீல்டிங் நின்றிருந்தார். பவுலர்களின் லைன் மற்றும் லெந்த் மாறும் போது, உடனடியாக சிந்தித்து திட்டத்தை மாற்றி இருக்க வேண்டும். அன்றைய நாளில் இந்திய பவுலர்களும், கேப்டனும் செய்த தவறு 2வது டெஸ்ட் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது என்று விமர்சித்துள்ளார்.
அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி அதிகளவில் டிஃபென்சிவாக இருந்தது என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். அதற்கு ரோஹித் சர்மா ஆஸ்திரேலியா மண்ணில் குறைந்த அளவிலான டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி இருப்பதும் மறைமுக காரணமாக பார்க்கப்படுகிறது.