பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியா அணியிடம் ஜஸ்பிரிட் பும்ராவை போல் பவுலிங் செய்யக் கூடிய 3 தரமான பவுலர்கள் இருக்கிறார்கள் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கில் வாஹன் தெரிவித்துள்ளார். இந்திய அணி பேட்ஸ்மேன்கள் நிச்சயம் கஷ்டப்படுவார்கள் என்று கூறியுள்ள அவர், மூவரையும் சமாளிப்பதே மிகப்பெரிய விஷயம் என்று கூறியுள்ளார்.
காபா மைதானத்தில் நடந்து வரும் இந்திய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது. 2வது நாள் ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 405 ரன்களை விளாசி இருக்கிறது. 3வது நாளிலும் ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங் தொடரும் பட்சத்தில், பிரம்மாண்ட ஸ்கோரை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2வது நாளில் சிறப்பாக ஆடிய ட்ராவிஸ் ஹெட் 152 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்களும் விளாசி இருக்கின்றனர். கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணிக்கு எதிரான டெஸ்டில் ஆஸ்திரேலியா அணி 400 ரன்களுக்கு மேல் விளாசி இருக்கிறது. இந்திய அணி தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இந்திய அணியின் ஒரேயொரு விக்கெட் டேக்கராக பும்ரா மட்டுமே இருந்து வருகிறார்.
இதுவரை 5 இன்னிங்ஸ்களில் பவுலிங் செய்துள்ள இந்திய அணியில் பும்ரா 17 விக்கெட்டுகளையும், மற்ற பவுலர்கள் இணைந்து 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இதனால் இந்திய அணியின் பவுலிங் முழுக்க முழுக்க பும்ராவை மட்டுமே நம்பியுள்ளது. சிராஜ், ஹர்சித் ராணா மற்றும் ஆகாஷ் தீப் ஆகிய மூவரும் எதிர்பார்த்த அளவிற்கு தங்களின் திறமையை வெளிப்படுத்தவில்லை.
இதுகுறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கில் வாஹன் பேசுகையில், இந்த டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரிட் பும்ரா மகத்தான பவுலிங்கை செய்து வருகிறார். பிரிஸ்பேன் டெஸ்டின் முதல் இன்னிங்ஸிலும் பும்ராவை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் இந்திய அணியின் சிக்கல் என்னவென்றால், ஆஸ்திரேலியா அணியுடம் பும்ராவுக்கு நிகராக பவுலிங் செய்யக் கூடிய 3 பவுலர்கள் இருக்கின்றனர்.
ஹேசல்வுட், பேட் கம்மின்ஸ் மற்றும் மிட்சல் ஸ்டார்க் என்று மூன்று உலகத்தரம் வாய்ந்த பவுலர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு எதிராக பிரிஸ்பேன் பிட்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் சமாளித்து விளையாடுவது எளிதான விஷயமல்ல என்று தெரிவித்துள்ளார். முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸை தவிர்த்து இந்திய அணி பேட்டிங் ஆடிய 3 இன்னிங்ஸிலும் 200 ரன்களை கூட எட்டவில்லை.
இதனால் நாளை இந்திய அணி பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று விளையாடவில்லை என்றால், காபா மைதானத்தில் வரலாற்று தோல்விக்கு தயாராக வேண்டிய சூழல் ஏற்படும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் பெர்த் டெஸ்டின் 2வது இன்னிங்ஸில் வெளிப்படுத்திய ஆட்டத்தை இந்திய அணி பேட்ஸ்மேன்கள் மீண்டும் வெளிப்படுத்த வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.