சிட்னி: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீது நிச்சயம் மனதளவில் ஆஸ்திரேலியா அணியின் வீரர்களின் தாக்குதல் அதிகமாக இருக்கும் என்று முன்னாள் வீரர் ஸ்டீவ் ஓகீஃப் தெரிவித்துள்ளார். அதேபோல் விராட் கோலி காட்டுக்கே ராஜாவாக இருந்தாலும், அவர் பலவீனமடைந்துவிட்டதாக விமர்சித்துள்ளார்.
இந்திய அணியின் ஜாம்பவான் வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் மோசமான பேட்டிங் ஃபார்மில் உள்ளனர். நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா 6 இன்னிங்ஸ்களில் விளையாடி 92 ரன்களும், விராட் கோலி 6 இன்னிங்ஸ்களில் விளையாடி 93 ரன்களும் மட்டுமே விளாசினர். இதனால் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தனர்.

இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. ஏற்கனவே விராட் கோலி ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ள நிலையில், ரோஹித் சர்மா 2வது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டெஸ்ட் தொடரில் எந்த வீரர் மோசமாக விளையாடுகிறாரோ, அவரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரும்.
ஏனென்றால் ரோஹித் சர்மா 38 வயதை எட்டவுள்ள நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருடன் ஓய்வு பெறுவார் என்று பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் ஸ்பின்னரான ஸ்டீவ் ஓகீஃப் பேசுகையில், ரோஹித் சர்மா ஒன்று அல்லது இரண்டு டெஸ்ட் போட்டிகளை மிஸ் செய்வார் என்று நினைக்கிறேன். ஆனால் இந்திய அணியின் கேப்டனாக களமிறங்கும் போது, ஆஸ்திரேலியா வீரர்கள் சாதாரணமாக இருக்க மாட்டார்கள்.
நிச்சயம் அவர் மீது ஏராளமான தாக்குதல்கள் இருக்கும். வார்த்தை மோதல், மனதளவிலான அட்டாக் என்று களத்தில் மிரட்டுவதற்கு காத்திருப்பார்கள். ஏனென்றால் ஆஸ்திரேலியா வீரர்களின் முதல் நோக்கமே எதிரணியின் கேப்டனை பலவீனப்படுத்துவது தான். அதனால் ரோஹித் சர்மாவை அவ்வளவு எளிதாக ரன்கள் குவிக்க விட மாட்டார்கள்.
அதேபோல் விராட் கோலி கடந்த சீசன்களில் ஏராளமான முறை ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலியா அணி அவரின் பேட்டிங்கை நினைத்து கவலைக் கொண்ட காலங்கள் இருந்துள்ளது. அவர் நிச்சயம் சிறந்த வீரர் தான். ஆனால் விளையாட்டின் போது காட்டுக்கே ராஜாவாக இருக்கும் சிங்கம் கொஞ்சம் பலவீனமாக இருப்பது தெரிந்தாலும், அடிகள் பலமாக இருக்கும். அதனால் விராட் கோலி எப்படி கையாளப் போகிறார் என்பதை பார்க்க ஆவலாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.