பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர் ட்ராவிஸ் ஹெட் சதமடித்த போட்டிகளில் ஒன்றில் கூட அந்த அணி தோல்வியடைந்தது இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதுவரை அவர் 14 சதங்கள் அடித்து 14 போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றியை பெற்று அசத்தியுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி காபா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடி வரும் ஆஸ்திரேலியா அணி 2வது நாள் ஆட்டம் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 405 ரன்களை விளாசியுள்ளது. அதிகபட்சமாக ட்ராவிஸ் ஹெட் 152 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்களையும் குவித்துள்ளனர்.

இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரிட் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இந்தப் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் - ட்ராவிஸ் ஹெட் இருவரும் இணைந்து 241 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர். இதனால் 3வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோர் 500 ரன்களை எட்டுவதற்கு கூட வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.
இன்றைய நாளில் மட்டும் ஆஸ்திரேலியா அணி 377 ரன்களை விளாசியுள்ளது. கிட்டத்தட்ட பேஸ் பாணியிலான ஸ்டைலில் ஆஸ்திரேலியா அணி ரன்கள் குவித்திருப்பதை புரிந்து கொள்ள முடியும். இதற்கு முக்கியக் காரணமாக நட்சத்திர வீரர் ட்ராவிஸ் ஹெட் அமைந்துள்ளார். 160 பந்துகளில் 18 பவுண்டரிகள் உட்பட 152 ரன்களை விளாசி இருக்கிறார். இதனால் ஆஸ்திரேலியா அணியின் ரன் ரேட் உச்சத்தில் இருந்தது.
இதனால் இந்திய அணிக்கு முதல் இன்னிங்ஸில் மிகப்பெரிய ஸ்கோரை பதிவு செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது. காபா பிட்சை பொறுத்தவரை எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதற்கு புதிய பந்தில் பும்ராவின் பந்துவீச்சில் வீழ்த்தப்பட்ட விக்கெட்டுகளை சாட்சியாக அமைந்துள்ளது. இதன் காரணமாக கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க் மற்றும் ஹேசல்வுட்டின் பவுலிங்கை இந்திய பேட்ஸ்மேன்கள் தாக்கு பிடிப்பார்களா என்ற கேள்வி உள்ளது.
அதுமட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட்டில் ட்ராவிஸ் ஹெட் தனது 15வது சதத்தை விளாசினார். இதுவரை ட்ராவிஸ் ஹெட் சதமடித்த 14 போட்டிகளில், ஆஸ்திரேலியா அணி ஒன்றில் கூட தோல்வியை சந்தித்ததில்லை. இதனால் இந்த ஆட்டத்திலும் ஆஸ்திரேலியா அணி நிச்சயம் வெற்றி பெறும் என்று அந்நாட்டு ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
சுமாரான கேப்டன்சி மற்றும் மோசமான பவுலிங் திட்டங்களே ட்ராவிஸ் ஹெட்டின் ஆட்டத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட்ட 6 இன்னிங்ஸ்களில் 4 சதங்களை ட்ராவிஸ் ஹெட் விளாசி இருக்கிறார். இதனால் ட்ராவிஸ் ஹெட்டை கட்டுப்படுத்த 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டனாக ரோஹித் சர்மா சிறந்த திட்டத்துடன் வருவாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
மேலும் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது தொடர்பான கனவும் முடிவுக்கு வரும். ஏற்கனவே தென்னாப்பிரிக்கா அணி இறுதிப்போட்டியில் ஒரு காலினை வைத்துள்ள நிலையில், ஆஸ்திரேலியா அணியும் தனது ஒரு காலினை வைத்துவிடும்.