மெல்போர்ன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. கடைசி நாளில் இந்திய அணி டிரா செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, ரிஷப் பண்ட் ஆடிய தேவையில்லாத ஷாட் மொத்த ஆட்டத்தையும் மாற்றியுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா அணி 474 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 369 ரன்களை விளாசியது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா அணி 2வது இன்னிங்ஸை 105 ரன்கள் முன்னிலையுடன் தொடங்கியது.

4வது நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 228 ரன்களை சேர்த்திருந்தது. இந்த நிலையில் 5வது நாள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதில் ஆட்டத்தின் 2வது ஓவரிலேயே ஆஸ்திரேலியா அணி 234 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதனால் இந்திய அணி வெற்றிபெற 340 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.
இதன்பின் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் கேப்டன் ரோஹித் சர்மா 9 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த கேஎல் ராகுல் டக் அவுட்டாகியும், விராட் கோலி 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் ஜெய்ஸ்வால் - ரிஷப் பண்ட் இருவரும் நிதானமாக விளையாடினர்.
4வது விக்கெட்டுக்கு 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கப்பட்ட நிலையில், ரிஷப் பண்ட் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின் வந்த ஜடேஜா 2 ரன்களிலும், நிதிஷ் குமார் ரெட்டி 1 ரன்னிலும், ஆகாஷ் தீப் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த பும்ரா மற்றும் சிராஜ் இருவரும் டக் அவுட்டாகி வெளியேற, இந்திய அணி 155 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.
இதனால் ஆஸ்திரேலியா அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று அசத்தியுள்ளது. இதன் மூலமாக ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் இந்திய அணி அதள பாதாளத்திற்கு சென்றுள்ளது.