சென்னை: இந்திய அணிக்கு எதிரான போட்டியில் உலகக்கோப்பை போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரைன் 5வது லீக் போட்டியில் வலிமை வாய்ந்த அணிகளான இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் தொடங்கியுள்ளது. 5 முறை கோப்பையை வென்ற ஆஸ்திரேலியாவும், 2 முறை கோப்பை வென்ற இந்தியாவும் மோதுவதால் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள இந்தப் போட்டியை பார்க்க ரசிகர்கள் 11.30 மணியில் இருந்தே கூடி வருகின்றனர்.

இந்த நிலையில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். சென்னையில் அதிக வெப்பம் இருப்பதால், முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கே அதிக சாதகம் ஏற்படும். இதனால் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்திய அணியில் காய்ச்சல் காரணமாக சுப்மன் கில் சேர்க்கப்படவில்லை.
இதனால் இந்திய அணியின் தொடக்க வீரராக இஷான் கிஷன் களமிறங்கவுள்ளார். டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசுகையில், முதலில் பேட்டிங் செய்ய விரும்புகிறோம். சூரியன் உச்சத்தில் இருப்பதால், பேட்டிங் செய்ய சரியான சூழலாக உள்ளது. ஒரு அணியாக சிறந்த பேலன்ஸை கொண்டிருக்கிறோம். அதேபோல் வீரர்கள் அனைவரும் புத்துணர்ச்சியுடன் இருக்கிறார்கள். டிராவிஸ் ஹெட் இன்னும் தயாராகவில்லை. அதேபோல் அப்பட், இங்லிஸ் மற்றும் ஸ்டாய்னிஸ் ஆகியோர் தேர்வு செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.
தொடர்ந்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில், இந்த ஆடுகளம் பவுலர்களுக்கு சாதகமானது. அதேபோல் ஆட்டம் தொடங்கிய சில மணி நேரங்களில் நன்றாக ஸ்விங்காகும். இந்த ஆடுகளத்தில் எந்த லைன் மற்றும் லெந்தில் பந்துவீச வேண்டும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். சென்னையில் மிகச்சிறந்த கிரிக்கெட்டை எப்போதும் விளையாடி இருக்கிறோம்.
பயிற்சி ஆட்டங்களுக்கு முன் இரு சிறந்த கிரிக்கெட் தொடர்களில் விளையாடி இருக்கிறோம். சுப்மன் கில் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. அவருக்கு பதிலாக இஷான் கிஷன் தொடக்கம் கொடுக்கிறார் என்று தெரிவித்துள்ளார். இந்திய அணி 3 ஸ்பின்னர்கள், 3 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியுள்ளது. ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், அஸ்வின் மேஜிக் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பு உள்ளது.