சிட்னி: 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஆஸ்திரேலியா பிட்ச்கள் தற்போது மாறிவிட்டதாக அந்த அணியின் நட்சத்திர வீரர் ட்ராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா மண்ணில் நடக்கும் ஏராளமான டெஸ்ட் போட்டிகள் 5வது நாள் வரை செல்வதாகவும் இந்திய அணிக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கவுள்ளது. இந்த 5 போட்டிகளும் ஆஸ்திரேலியாவின் பெர்த், அடிலெய்ட், காபா, மெல்போர்ன் மற்றும் சிட்னி ஆகிய 5 மைதானங்களில் நடக்கவுள்ளது. ஒவ்வொரு மைதானமும் வித்தியாசமாக செயல்படும் என்பதால், ஆஸ்திரேலியா அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது இந்திய அணிக்கு எளிதாக இருக்காது என்று பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் கடந்த முறையை காட்டிலும் இம்முறை ஆஸ்திரேலியா அணியின் ட்ராவிஸ் ஹெட், லபுஷேன், மிட்சல் மார்ஷ் உள்ளிட்ட வீரர்கள் கூடுதல் முன்னேற்றம் அடைந்துள்ளனர். டேவிட் வார்னர் இல்லையென்றாலும் ஸ்வீனி, இங்லிஸ் உள்ளிட்ட வீரர்களை ஆஸ்திரேலியா அணி நிர்வாகம் சிறப்பாக தயார் செய்துள்ளது. சொந்த மண்ணில் விளையாடுவது அவர்களுக்கு கூடுதல் சாதகத்தை அளித்துள்ளது.
இதனால் இந்திய அணியால் ஆஸ்திரேலியா மண்ணில் ஹாட்ரிக் கோப்பையை வெல்ல முடியாது என்று அந்நாட்டு மீடியாக்கள் பேசி வருகின்றனர். இதுகுறித்து ஆஸ்திரேலியா அணியின் ட்ராவிஸ் ஹெட் பேசுகையில், கடந்த 2 ஆண்டுகளாக ஆஸ்திரேலியா மண்ணில் நடந்துள்ள டெஸ்ட் போட்டிகளை சந்தித்தால், பிட்ச்கள் நிறைய மாற்றம் அடைந்துள்ளதை அறிய முடியும்.
எங்கள் நாட்டின் பிட்ச்களில் எப்படி விளையாட வேண்டும் என்பதை எங்களின் ஸ்டைலாக மாற்றியுள்ளோம். அதனால் கடந்த 2 ஆண்டுகளாக எங்களுக்கு சொந்த மண்ணில் வெல்வது கடினமாக இருந்தது. அதனால் இந்திய அணிக்கு ஆஸ்திரேலியாவின் பிட்ச்-கள் மிகப்பெரிய வித்தியாசத்தை அளிக்கும். அதேபோல் ஏராளமான டெஸ்ட் போட்டிகள் 5வது நாள் வரை சென்றுள்ளது. கடந்த சீசனில் நாங்கள் 5வது நாளில் எத்தனை போட்டிகள் விளையாடினோம் என்பதே நினைவில் இல்லை.
அதனால் கடந்த முறையை காட்டிலும் இம்முறை ஆஸ்திரேலியா மண்ணில் விளையாடுவது கூடுதல் சிரமமாக இருக்கும். இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு வித்தியாசமான பிட்ச்களில் விளையாடுவது எளிதாக இருக்காது. கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்கா மண்ணில் விளையாடிய போது ஒரு போட்டியில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்தனர். இதன் மூலமாக இந்திய பேட்ஸ்மேன்கள் எவ்வளவு சிரமப்படுவார்கள் என்பதை பார்க்க முடியும்.
சொந்த மண்ணில் விளையாடுவது எங்களுக்கு எளிதாக இருக்கும் என்று கருதுகிறேன். ஒரு வேளை இங்கிலாந்து அணி வந்திருந்தால், இந்த வகையான பிட்ச்கள் அவர்களின் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைந்திருக்க வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் இந்திய பவுலர்களை குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால் ஸ்பின்னர்களை ஆட்டத்தில் இருந்து வெளியில் வைப்பது நன்று என்று தெரிவித்துள்ளார்.