மும்பை : பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வரும் 22ஆம் தேதி பெர்த் நகரில் தொடங்குகிறது. இந்த தொடர்கான இந்திய அணி கடந்த 10 நாட்களுக்கு மேலாக பெர்த் நகரில் முகாம் இட்டு பயிற்சி செய்து வருகின்றனர்.
பெர்த் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணி வீரர்கள் தாக்குப் பிடிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சூழலில் முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா, கில் ஆகியோர் இடம்பெற மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனால் அறிமுக வீரர்களாக நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் ஹர்ஷித்ராணா ஆகியோர் களமிறங்க போகிறார்கள். கே எல் ராகுல் தொடக்க வீரராகவும் கில் இடத்தில் முன்னாள் ஆர் சி பி வீரர் படிக்கல்லும் விளையாடப் போகிறார் என்று தெரிகிறது. இந்த சூழலில் இந்திய அணியின் அனுபவ வீரரான முகமது சமி கடந்த ஒரு ஆண்டாக காயம் காரணமாக எந்த போட்டிகளிலும் விளையாடாமல் இருந்தார்.
இந்த சூழலில் தற்போது முழு உடல் தகுதியை எட்டி இருக்கும் முகமது சமி அண்மையில் ரஞ்சி கிரிக்கெட் ஆட்டத்தில் பங்கேற்று 7 விக்கெட்டுகளை கைப்பற்றி தன்னுடைய உடல் தகுதியை நிரூபித்திருக்கிறார். இதன் காரணமாக முஹமது சமியை உடனடியாக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று முன்னாள் கேப்டன் கங்குலி உள்ளிட்ட ஜாம்பவான்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பிசிசிஐ அதை கொஞ்சம் கூட கேட்கவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து வராமல் தற்போது பெங்கால் அணிக்காக சையது முஸ்தாக் டி20 தொடரில் விளையாட வைக்க உள்ளனர். டெஸ்ட் போட்டிக்கு தயாராக கடுமையாக உழைத்து வந்த சமியை தேவையில்லாமல் ஏன் டி20 போட்டியில் விளையாட வைக்கிறீர்கள் என்று ரசிகர்களும் கேள்விகளை கேட்டு வருகின்றனர்.
சமியை டி20 போட்டியில் ஆட வைப்பதற்கு பதிலாக ஆஸ்ரேலியாவுக்கு அழைத்து வந்து அவரை பயிற்சி செய்ய வைத்திருக்கலாம் என்றும் ரசிகர்கள் யோசனை தெரிவித்து இருக்கின்றனர். முதல் டெஸ்ட் போட்டியில் சமியை ஆட வைக்கவில்லை என்றாலும் இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 6ஆம் தேதி தான் நடைபெறுகிறது.
அதற்கு இன்னும் 15 நாட்களுக்கு மேல் இருப்பதால், சமியை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து வந்து பயிற்சியை கொடுத்திருக்கலாம் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். சமியை டி20 போட்டியில் விளையாட வைத்து மெகா தவறை தேர்வு குழுவினர் செய்வதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.