ரோஹித் சர்மா
இந்தியா அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் ரோஹித் சர்மா முதலில் சேர்க்கப்படவில்லை. அவருக்கு இருந்த சிறிய காயத்தை காரணமாக காட்டி அவரை தேர்வு செய்யாமல் இருந்தது பிசிசிஐ. அப்போதே ரோஹித் சர்மா உடல் எடை அதிகமாக இருப்பதால் கேப்டன் விராட் கோலி அவரை அணியில் தேர்வு செய்யவில்லை என கூறப்பட்டது.
ஆஸ்திரேலியா சென்றார்
பின்னர் டெஸ்ட் அணியில் மட்டும் தேர்வு செய்யப்பட்ட ரோஹித் சர்மா, பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயத்தில் இருந்து மீள அவருக்கு சிகிச்சை மற்றும் போட்டிக்கு தயாராக பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தது. அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் வகையில் கடந்த வாரம் ஆஸ்திரேலியா சென்றார்.
தேசிய கிரிக்கெட் அகாடமி
இந்த நிலையில், ரோஹித் சர்மாவுக்கு தேசிய கிரிக்கெட் அகாடமியில் என்ன பயிற்சிகள் அளிக்கப்பட்டது என்பது குறித்து, அந்த அகாடமியில் பணியில் உள்ள முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா கூறி உள்ளார். ரோஹித் கடுமையான பயிற்சிகள் செய்யும் வகையில் பார்த்துக் கொண்டதாக தெரிவித்தார்.
கடுமையான பயிற்சிகள்
ஐபிஎல் மற்றும் அதற்கு முன்பு ரோஹித் சர்மா உடல் எடை அதிகரித்து இருந்ததாகவும், அதனால் அவர் கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டு உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தியதாகவும் அவர் கூறினார்.
பிசிசிஐ உறுதி
ரோஹித் சர்மா கடந்த ஆண்டு நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பும் காலில் ஏற்பட்ட காயத்தால் அந்த தொடரில் பங்கேற்கவில்லை. அவர் அடிக்கடி காயத்தில் சிக்க உடல் எடையும் ஒரு காரணம் என்பதால் அவர் உடல் எடையை குறைக்க வேண்டும் என பிசிசிஐ உறுதியாக இருந்துள்ளது.