சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு முன் இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் தானாக கடைசி போட்டியில் இருந்து மட்டும் விலகியதாக இந்திய அணியை சேர்ந்தவர்கள் வெளியே கூறினாலும், உண்மையில் ரோஹித்தை நீக்கியது பிசிசிஐ-யின் தேர்வுக் குழுதான் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
பயிற்சியாளர் கவுதம் கம்பீர், ரோஹித் சர்மாவை அணியில் இருந்து நீக்கியதாக ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வந்தது. அந்த தகவலும் தவறு என தற்போது தெரிய வந்துள்ளது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் ரன் குவிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து சொதப்பி இருந்தார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரது பேட்டிங் சராசரி 6 என்பதாக சரிந்தது. இந்திய அணி இந்த தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலை உள்ளது. இந்த நிலையில் தான் கேப்டனாகவும், பேட்ஸ்மேன் ஆகவும் ரோஹித் சர்மா மிக மோசமாக செயல்பட்டு வந்ததை சுட்டிக் காட்டி அவரை அணியிலிருந்து நீக்கும் முடிவை பிசிசிஐ-யின் தேர்வுக் குழு எடுத்தது.
தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் தான் இந்த தகவலை ரோஹித் சர்மாவிடம் தெரிவித்தார் என கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின் ரோஹித் சர்மா எப்போதும் டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட மாட்டார் என்ற தகவல் அவருக்கு சொல்லப்பட்டு இருக்கிறது. இதை தொடர்ந்து அவர் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.
இந்த விஷயத்தை அப்படியே வெளியே கூறினால் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படலாம் என்ற எண்ணத்தில் ரோஹித் சர்மா தாமாக ஐந்தாவது போட்டியில் இருந்து விலகி விட்டதாக, புதிதாக கேப்டனாக நியமிக்கப்பட்ட பும்ராவும், மற்ற இந்திய வீரர்களும் கூறி வருகின்றனர்.
ஆனால், ரோஹித் சர்மா பிசிசிஐயின் தேர்வு குழுவால் அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டு இருக்கிறார். இந்த விஷயம் எப்போதும் வெளிப்படையாக சொல்லப்படாது. இதில் கவுதம் கம்பீரின் பங்கு என்பது சுப்மன் கில்லை ரோஹித் சர்மாவுக்கு பதிலாக சேர்த்தது மட்டுமே. ஒருவேளை இந்திய அணி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினாலும் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காது.