ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருக்கிறது. ரோகித் சர்மாவுக்கு பதில் கேப்டனாக செயல்பட்ட பும்ரா அபாரமாக அணியை வழிநடத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் கே எல் ராகுலும் தொடக்க வீரராக தன்னுடைய திறமையை வெளிக்காட்டி இருக்கிறார்.
இதனால் இனி டெஸ்ட் அணிக்கு ரோகித் சர்மா தேவையில்லை என்றும் பும்ராவையே கேப்டனாக தொடர வையுங்கள் என்று ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் பதவி குறித்து கேள்வி பும்ராவிடம் கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த பும்ரா, நான் ரோகித் சர்மா இல்லை என்பதால் அவருடைய இடத்தை நிரப்ப தான் வந்தேன். எங்கள் அணியில் கேப்டன் இப்போதும் ரோகித் சர்மா தான். அவர் கேப்டனாக சிறப்பான பல பணிகளை செய்து இருக்கிறார். இந்த தொடருக்கு ஆயத்தமாகும் விதமாக நான் இந்தியாவில் இருக்கும் போது ரோகித் சர்மாவுடன் தான் பேசி ஆலோசனை மேற்கொண்டேன்.
இந்த தொடரை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து இருவரும் கலந்துரையாடினோம் என்று பதில் அளித்து இருக்கிறார். இதன் மூலம் எங்களுடைய கேப்டன் என்றும் ரோகித் சர்மா தான் என்பதை திட்டவட்டமாக பும்ரா கூறியிருக்கிறார். இதேபோன்று இந்த வெற்றி குறித்து பேசிய பும்ரா, கேப்டனாக இது என்னுடைய முதல் வெற்றி. என்னுடைய மகனும் ஆஸ்திரேலியாவில் என்னுடன் இருக்கின்றார்.
இந்த வெற்றியை நான் என் மகனுடன் கொண்டாடுவேன். என் வாழ்நாள் முழுவதும் இந்த வெற்றியை நினைவில் கொள்வேன் என்று பும்ரா கூறினார். ஆட்ட நாயகன் விருது குறித்து பேசிய பும்ரா இந்த ஆட்ட நாயகன் விருதை நான் வேறு யாருக்காவது கொடுக்க வேண்டும் என்றால் அதனை நான் நிச்சயம் ஜெய்ஸ்வாலுக்கு தான் வழங்குவேன்.ஏனென்றால் நான் பார்த்ததில் சிறந்த டெஸ்ட் சதம் இதுவாகும் என்று பும்ரா கூறியிருக்கிறார். ஜெய்ஸ்வாலுக்கு இந்த ஆட்டநாயகன் விருதை தருவேன் என்று கூறியிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்து வருகிறது.