மெல்போர்ன்: என்சிஜி மைதானத்தில் அதிக ரன்கள் விளாசிய இந்திய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு விராட் கோலிக்கு கிடைத்துள்ளது. இதுவரை மெல்போர்ன் மைதானத்தில் 3 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, ஒரு சதம் உட்பட 316 ரன்களை விளாசி இருக்கிறார்.
பெர்த் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் விராட் கோலி சதம் விளாசிய பின், இனி பார்டர் கவாஸ்கர் டிராபியை இந்திய அணிக்கு பெற்று கொடுப்பார் என்று ரசிகர்கள் நம்பி இருந்தனர். ஆனால் வழக்கம் போல் அடுத்த 3 இன்னிங்ஸ்களிலும் விராட் கோலி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி விமர்சனங்களை பெற்று வருகிறார்.

குறிப்பாக அவுட்சைடு ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசினாலே விராட் கோலி விக்கெட்டை கொடுத்துவிடுவார் என்ற பேச்சுகள் ரசிகர்கள் மத்தியில் விவாதமாகி வருகிறது. கடந்த டெஸ்ட் போட்டிக்கு பின் அஸ்வினின் ஓய்வு அறிவிப்பால், இந்திய அணியின் மீதான விமர்சனங்கள் கவனம் பெறவில்லை. ஆனால் பாக்ஸிங் டே டெஸ்டில் சொதப்பினால், சீனியர் வீரர்களை வீட்டுக்கு அனுப்புங்கள் என்ற கோஷம் உச்சத்தை எட்டும்.
இதனால் நட்சத்திர வீரர் விராட் கோலி வலைப்பயிற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். நேற்றைய பயிற்சியின் போது ஹர்சித் ராணா மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரையும் எதிர்த்து விளையாடினார். அதேபோல் உள்ளூர் இடதுகை பவுலர் ஒருவரையும் பவுலிங் செய்ய வைத்து பேட்டிங் பயிற்சி செய்தார். அதேபோல் அவுட்சைடு ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசிய பந்துகளை, நன்றாக லீவ் செய்து விளையாடினார்.
தொடர்ந்து மெல்போர்ன் மைதானத்தில் என்ன மாதிரியான லைனில் பவுலிங் செய்ய வேண்டும் என்று ஹர்சித் ராணா மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவருக்கும் அறிவுரை வழங்கினார். அதேபோல் இந்த டெஸ்ட் தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 126 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தாலும், விராட் கோலியின் ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு கொஞ்சம் கூட குறையவில்லை.
ஏனென்றால் மெல்போர்ன் மைதானத்தில் விராட் கோலியின் ஆட்டம் அசத்தலாக இருந்துள்ளது. 2014ஆம் ஆண்டு நடைபெற்ற பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் விராட் கோலி அபாரமாக விளையாடி 169 ரன்களை விளாசி இருந்தார். மெல்போர்ன் மைதானத்தில் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 316 ரன்களை விளாசி இருக்கிறார்.
அதேபோல் மெல்போர்ன் மைதானத்தில் அதிக ரன்களை விளாசிய இந்திய வீரர் என்ற பெருமையை பெறும் வாய்ப்பு விராட் கோலிக்கு கிடைத்துள்ளது. இதுவரை மெல்போர்ன் மைதானத்தில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் டெண்டுல்கர் ஒரு சதம், 3 அரைசதம் உட்பட 449 ரன்களை விளாசி இருக்கிறார். 2வது இடத்தில் 3 போட்டிகளில் விளையாடி 2 சதங்கள் உட்பட 369 ரன்களுடன் ரஹானே இருக்கிறார்.
நாளைய ஆட்டத்தில் விராட் கோலி 134 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் விராட் கோலியால் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை படைக்க முடியும். ஏற்கனவே பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்திருந்தால், சுனில் கவாஸ்கரின் சாதனையை எட்டியிருக்க முடியும். அந்த வாய்ப்பை விராட் கோலி நழுவவிட்ட சூழலில், மெல்போர்னில் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.