துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் தெரிவித்துள்ளார். இரு அணிகளும் மோதும் முதல் அரை இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை மதியம் 2:30 மணிக்கு தொடங்குகிறது.
இந்திய அணியில் 4 முதல் 5 சுழற் பந்துவீச்சாளர்கள் விளையாடலாம் என்பதால் அதனை எதிர்கொள்ள தாங்கள் தயாராக இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய அவர், "வருண் சக்கரவர்த்தி மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களும் திறமை வாய்ந்தவர்கள். இதனால் எங்களுக்கு பெரிய கண்டமே காத்திருக்கிறது. இந்தியாவின் சுழற் பந்துவீச்சை நாங்கள் எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதை பொறுத்து போட்டியின் முடிவு இருக்கும்."
"இது கடும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இந்த சுழற் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள எங்களிடமும் திட்டம் இருக்கின்றது. போட்டி அன்று என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டும். எங்கள் அணியிலும் பல சுழற்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். மேக்ஸ்வெல், ஷார்ட் போன்ற வீரர்களும் பந்து வீசுவார்கள்."
"இது போன்ற பெரிய போட்டிகளில் விளையாடும் போது எப்போதுமே அழுத்தம் இருக்கும். இதே போல் இந்தியாவுக்கு எதிராக எங்கள் அணியின் டிராவிஸ் ஹெட் அபாரமாக கடந்த காலங்களில் செயல்பட்டு இருக்கிறார். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கூட அவர் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார்."
"இதனால் அரை இறுதியில் அவர் அதிரடியாக விளையாடி எங்களுக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தால் எங்களுக்கு தேவையான முடிவு கிடைத்துவிடும். துபாயில் இந்திய அணி வீரர்கள் அனைத்து போட்டிகளிலும் விளையாடி இருப்பதால் அது அவர்களுக்கு சாதகமான விஷயமாக தான் இருக்கும்."
"நாங்களும் இரண்டு நாட்கள் முன்பே துபாய் வந்து பயிற்சி செய்து விட்டோம். இதனால் ஆடுகளம் எவ்வாறு இருக்கும் என்பதற்கான புரிதல் இருக்கிறது. எங்கள் அணியில் பல ஸ்டார் வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லை என்றாலும் தற்போது அணியில் இருக்கும் சிலரும் நன்றாகவே செயல்பட்டு இருக்கிறார்கள். இந்தியாவிற்கு எதிராக நாங்கள் சிறப்பாக செயல்பட்டு மேலும் ஒரு இறுதிப் போட்டிக்கு செல்ல முயற்சி செய்வோம்" என ஸ்மித் கூறியுள்ளார்.