சாம்பியன்ஸ் தொடரில் அரை இறுதிச்சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றிருக்கிறது. தற்போது 50 ஓவர் உலகக் கோப்பை சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை அரையிறுதியில் இந்தியா எதிர்கொள்ள இருக்கிறது.
டி20 போட்டியில் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு சென்றது.
இதனால் இந்தியாவை பழி தீர்க்க வேண்டிய உத்வேகத்தில் ஆஸ்திரேலிய அணி இருக்கிறது. ஆனால் இந்திய அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே நல்ல பலத்துடன் இருக்கிறது .

மேலும் இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் எதிர் அணி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறார்கள். இந்த தருணத்தில் இந்திய அணிக்கு தற்போது மிகப்பெரிய தலைவலி ஒன்று ஏற்பட்டிருக்கிறது. லீக் சுற்றில் நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் ரோகித் சர்மா ஹர்ஷித் ராணாவை நீக்கிவிட்டு வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு வழங்கினார்.
இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட வருண் சக்கரவர்த்தி, ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி நியூசிலாந்து அணியை திணற வைத்தார்.இதன் மூலம் வருண் சக்கரவர்த்திக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த சூழலில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய வீரரை எப்படி அரையிறுதியில் விளையாடாமல் நீக்குவது என்ற தலைவலி ஏற்பட்டிருக்கிறது.
ஒருவேளை வருண் சக்கரவர்த்தி அணிக்கு வந்தால் இந்திய அணி வெறும் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து விளையாடும் நிலைக்கு தள்ளப்படும்.
இதனால் ஹர்ஷித் ராணாவுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். ஆனால் ஆஸ்திரேலியா போன்ற அணியை எதிர்கொள்ளும் போது இரண்டு வேகப் பந்துவீச்சாளர்கள் வைத்து விளையாடுவது மிகப்பெரிய ரிஸ்க்காக பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ரோகித் சர்மா, வருண் சக்கரவர்த்தி தற்போது சிறப்பாக செயல்பட்டு இருப்பதால் யாரை தேர்வு செய்வது யாரை விடுவது என்ற தலைவலி ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளார். ஆஸ்திரேலிய வீரர்களும் சுழற் பந்துவீச்சுக்கு எதிராக தடுமாறுவார்கள் என்பதால் இந்திய அணி இதே திட்டத்தை கையாள வேண்டும் என கிரிக்கெட் வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.