துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் காயம் அடைந்தார். டாஸ் வென்று முதலில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வந்தது.
வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் அதிரடியாக விளையாடி வந்த டிராவிஸ் ஹெட் ஆட்டம் இழந்தார். இளம் வீரர் கூப்பர் டக் அவுட்டாக ஸ்மித், மார்னஸ் லாபஸ்சேன் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்க போராடினர். இந்த சூழலில் தான் ஆட்டத்தின் 16 வது ஓவரில் அக்சர் பட்டேல் தாம் பந்து வீசியபோது அதனை தடுக்க முற்பட்டார்.

அப்போது கீழே விழுந்ததில் அவருடைய கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் வலியால் துடித்த அக்சர் பட்டேலுக்கு மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதை அடுத்து அக்சர் பட்டேல் களத்தை விட்டு வெளியேறினார். இதனைத் தொடர்ந்து அக்சர் பட்டேல் முதலுதவி சிகிச்சை எடுத்துக்கொண்டு மீண்டும் களத்திற்கு வந்து பந்துவீச்சை தொடங்கினார்.
அப்போது ஆட்டத்தின் 38வது ஓவரில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் மேக்ஸ்வெல் களமிறங்கினார். அக்சர் பட்டேல் ஓவரில் தூக்கி ஒரு சிக்ஸர் அடித்தார். இதனை அடுத்து தன்னுடைய அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி மேக்ஸ்வெல்லை கிளீன் போல்ட் ஆக்கினார். இது ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
துபாய் ஆடுகளத்தில் 250 ரன்கள் மேல் சேஸ் செய்வது என்பது கடினமாக பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் மேக்ஸ்வெல் பேட்டிங் செய்தால், ஆட்டத்தின் போக்கையே மாற்றி விடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அக்சர் பட்டேல் தன்னுடைய அனுபவம் மூலம் மேக்ஸ்வெல் விக்கெட்டை வீழ்த்தினார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரசிகர்கள், ஹர்திக் பாண்டியாவும், அக்சர் பட்டேலும் 50 ஓவர் உலகக் கோப்பை இறுதி போட்டியின் போது காயம் காரணமாக அணியில் இல்லை என்றும் அவர்கள் இருந்திருந்தால் நாம் ஒருவேளை ஆஸ்திரேலியாவை வீழித்தியிருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.