துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. இந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, நான்கு சுழற் பந்துவீச்சாளர், ஒரு வேகப்பந்துவீச்சாளர், ஒரு வேகப்பந்து ஆல்ரவுண்டர் ஆகியோரை தேர்வு செய்தார் .
இதனால் இந்தியா அணிக்கு விக்கெட் எடுக்கும் சுமை ஷமி மீது வந்து இறங்கியது. வங்கதேசத்துக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் சமி அபாரமாக செயல்பட்டு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த சூழலில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் ஷமி கொஞ்சம் தடுமாறினாலும், பின் கட்டுக்கோப்பாக பந்து வீசி இருந்தார்.

எனினும் ஷமி விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. இதேபோன்று நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஷமி வெறும் 4 ஓவர் மட்டும்தான் வீசியிருந்தார். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் ஷமி கட்டுக்கோப்பாக பந்து வீசினார்.
முதல் ஓவரில் டிராவிஸ் ஹெட், கொடுத்த கடினமான கேட்ச் வாய்ப்பைத் தவறவிட்டாலும் பின்னர் அபாரமாக செயல்பட்டு 48 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷமியின் இந்த அபார செயல்பாட்டு மூலம் ஆஸ்திரேலியா அணி 280 ரன்கள் தாண்டாமல் குறைந்த ஸ்கோர் மட்டுமே எடுத்தது. இது இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இந்த சூழலில் சாம்பியன்ஸ் டிராபி நாக் அவுட் சுற்றுகள் ரமலான் மாதத்தில் நடைபெற்று வருகிறது. ரமலான் மாதம் என்பது இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான நோன்பு வைப்பது மிகவும் முக்கியமாகும். ஆனால் துபாயில் கடும் வெயிலில் விளையாட வேண்டிய சூழல் இருப்பதால் சமி நோன்பு வைப்பாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் ஷமி இந்திய அணி தம்மை மட்டும் தான் நம்பி இருப்பதால் அன்று நோன்பு வைக்கவில்லை.
இதனை ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஷமி தடுமாறிய போது ஒரு சிலர் அவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தனர். ஆனால் தற்போது ஷமி நோன்பை நாட்டுக்காக விட்டதை குறிப்பிட்டு அதே ரசிகர்கள் ஷமியை பாராட்டி வருகின்றனர். இஸ்லாமியர்கள் மதத்தில் நோன்பு விடப்பட்டால் அதனை வேறு ஒரு நாளில் எடுத்து வைக்க அனுமதி இருக்கிறது. மேலும் பயணம் செய்பவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் நோன்பு வைப்பதில் இருந்து விதிவிலக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.