லாகூர்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது. இதன் மூலம் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஐசிசி சாம்பியன்ஷிப் தொடர் ஃபைனலுக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.
அரை இறுதியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை இந்தியா நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 11 பந்துகள் எஞ்சிய நிலையில் வீழ்த்தியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 264 ரன்கள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 267 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இந்திய அணியில் நட்சத்திர வீரர் விராட் கோலி 84 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த சூழலில் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அட்டவணை வெளியிடப்பட்ட போது இறுதிப்போட்டி வரும் மார்ச் 9ஆம் தேதி லாகூரில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சூழலில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தற்போது தகுதி பெற்றிருக்கிறது. அரசியல் காரணங்களால் இந்திய அணி தற்போது பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது. இதன் காரணமாக இந்திய அணி தங்களது அனைத்து போட்டியும் துபாயில் தான் விளையாடி வருகிறது. இதனால் ஃபைனல் எங்கு நடைபெறும் என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஆனால் இதனை ஏற்கனவே ஐசிசி தெளிவுபடுத்தி விட்டது. இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால்,பைனல் லாகூரில் நடத்தப்படாது என்றும் துபாய்க்கு மாற்றப்படும் என்றும் ஐசிசி கூறியிருந்தது. தற்போது இந்தியா பைனலுக்கு வந்துள்ள நிலையில் லாகூரில் நடத்தப்பட இருந்த இறுதிப்போட்டி தற்போது துபாய்க்கு மாற்றப்பட்டு இருக்கிறது.
இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர். 29 ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி தொடரை பாகிஸ்தான் நடத்திய நிலையில் தங்களது அணி முதல் சுற்றிலேயே வெளியேறி இருந்தது. தற்போது இறுதிப் போட்டியையாவது பார்க்கலாம் என எதிர்பார்த்த நிலையில், தற்போது இந்தியாவின் வெற்றியால் அந்த வாய்ப்பு பாகிஸ்தானுக்கு பறிபோய்விட்டது குறிப்பிடத்தக்கது.