துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி இன்று பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. முதலாவது அரை இறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இந்த சூழலில் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சு கொஞ்சம் பலவீனமாக இருந்தாலும் பேட்டிங் அதே பலத்துடன் தான் இருக்கின்றது.
குறிப்பாக இந்திய அணிக்கு எதிராக டிராவிஸ் ஹெட், அபாரமாக விளையாடி வருகிறார். 2023 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப்போட்டி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, 2024 டி20 உலக கோப்பை என இந்தியாவுக்கு எதிராக மட்டும் டிராவிஸ் ஹெட் அபாரமாக விளையாடி இருக்கிறார்.

இதில் டி20 உலக கோப்பை போட்டியை தவிர மற்ற இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவே வெற்றி பெற்றது. இந்த சூழலில் சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி ஆட்டத்தில் டிராவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்துவது குறித்து அஸ்வின் ஒரு ஐடியா வழங்கியிருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர், "டிராவிஸ் ஹெட் பேட்டிங் செய்யும்போது புதிய பந்தை யோசிக்காமல் வருண் சக்கரவர்த்தியிடம் கொடுத்து விடுங்கள். அவர் ஓவர் தி ஸ்டம்ப் முறையில் டிராவிஸ் ஹெட்டுக்கு பந்து வீசுவார். அப்போது டிராவிஸ் ஹெட் 3 ஸ்டெம்புகளையும் காண்பித்து, இடது புறமாக அடிக்க முயற்சி செய்வார். இதன் மூலம் இந்தியாவுக்கு விக்கெட் எடுக்கும் வாய்ப்பு கிடைக்கும்."
"வருண் சக்கரவர்த்தி பந்தை எதிர்கொள்ளாமல் டிராவிஸ் ஹெட் பின்வாங்கினார் என்றால், அதை பார்த்து நான் ஆச்சரியப்படுவேன். ஏனென்றால் டிராவிஸ் ஹெட், அனைத்து பவுலர்களுக்கு எதிராகவும் ஆக்ரோஷமாக விளையாட கூடியவர். எனவே இது நிச்சயம் நமக்கு ஹை ரிஸ்க் தான்."
"ஒன்று ஆஸ்திரேலியா அதிரடியாக விளையாடி நல்ல தொடக்கத்தை பெரும். இல்லையெனில் இந்திய அணி அவரை விரைவில் வீழ்த்தி விடும். ஒருவேளை வருண் சக்கரவர்த்தி ஓவரில் டிராவிஸ் ஹெட் தடுமாறினால், தொடர்ந்து அவருக்கு ஐந்து ஓவர் கூட வழங்குங்கள். ஆஸ்திரேலியா அணியில் நிறைய வலது கை பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். அவர்களை ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் பார்த்துக்கொள்வார்கள்."
"ஒரு இந்திய ரசிகனாக நான் இந்தியாவின் பவுலிங் வரிசையை நினைத்து தான் கவலைப்படுவேன். டாஸ் வென்றால் முதலில் ஆஸ்திரேலியாவை பேட்டிங் செய்ய சொல்லுங்கள். ஆஸ்திரேலிய அணியிடம் வெற்றி இலக்கை நிர்ணயிக்கும் பொறுப்பை கொடுங்கள். அப்போது டிராவிஸ் ஹெட் விக்கெட்டை நாம் விரைவில் வீழ்த்துவதன் மூலம் ஆட்டத்தை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம். இதுவே இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தால் எந்த சந்தேகமும் வேண்டாம். முடிந்தவரை பொறுமையாக விளையாடுங்கள். இந்த ஆடுகளத்திற்கு தேவையான இலக்கை விட கொஞ்சம் கூடுதலாக அடித்தால் கூட போதும்" என்று அஸ்வின் கூறியுள்ளார்.