துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி ஹைபிரிட் மாடல் முறைப்படி துபாயில் அனைத்து போட்டிகளிலும் விளையாடுகிறது. மற்ற அணிகள் எல்லாம் பாகிஸ்தானில் விளையாடும் நிலையில் இந்தியா மட்டும் ஒரே மைதானத்தில் விளையாடுவது அவர்களுக்கு கூடுதல் சாதகத்தை கொடுப்பதாக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ள ரோஹித் சர்மா, "துபாய் ஒன்றும் எங்களுக்கு சொந்த ஊர் கிடையாது என்று தெரிவித்திருக்கிறார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் அனைத்து போட்டிகளுக்கும் எங்களுக்கு வித்தியாசமான ஆடுகளத்தை தான் தருகிறார்கள்."

"இது வித்தியாசமான சவால்களை எங்களுக்கு கொடுக்கின்றது. நாங்கள் இங்கு மூன்று போட்டிகள் விளையாடி இருக்கின்றோம். இந்த மூன்று போட்டிகளுக்குமே ஆடுகளம் வித்தியாசமாக செயல்படுகிறது. இது ஒன்றும் எங்கள் சொந்த ஊர் கிடையாது. இது துபாய்! நாங்கள் இங்கு அதிகமாக எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் விளையாடியது கிடையாது."
"எங்களுக்கு எதுவுமே புதிய மைதானம் தான் என்பதை மறந்து விடாதீர்கள். துபாய் மைதானத்தில் நான்கு முதல் ஐந்து ஆடுகளம் இருக்கின்றது. எனவே அரையிறுதிக்கு எந்த ஆடுகளத்தை வழங்கப் போகிறார்கள் என்று எனக்கு இன்னும் தெரியாது. எது நடந்தாலும் நாங்கள் எந்த சவால்களை கொடுத்தாலும் அதற்கு எங்களை நாங்கள் தயார்படுத்திக் கொள்வோம்."
"எங்களுக்கு சாதகமோ, இல்லையோ அதில் தான் நாங்கள் விளையாட வேண்டும். நியூசிலாந்து பவுலர்கள் பந்து வீசும் போது பந்து கொஞ்சம் ஸ்விங் ஆனது. ஆனால் நாங்கள் முதல் இரண்டு போட்டிகளில் பந்து வீசும் போது அப்படி எதுவும் ஆகவில்லை. இதேபோன்று பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் விளையாடிய போது இங்கு சுழற் பந்து வீச்சு பெரிய அளவில் எடுபடவில்லை."
"ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. எனவே ஒரே மைதானத்தில் பல ஆடுகளத்தில் பல வித்தியாசமான சூழல் நிலவுகிறது. எனவே எங்களுக்கு ஆடுகளத்தை பற்றி நன்றாக தெரியும் என்றெல்லாம் கிடையாது. ஆடுகளத்தில் பவுலர்களுக்கு சாதகமாக ஏதேனும் இருந்தால் அது ஆர்வத்தை கூட்டும். சவால்கள் நிறைந்த ஆடுகளத்தை வழங்கினால் மட்டுமே போட்டி நன்றாக அமையும்" என்று கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.