துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அரை இறுதிச்சுற்றில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றிருக்கிறது. இதன் மூலம் 2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியதற்கு தற்போது இந்தியா பதிலடி கொடுத்திருக்கிறது.
இந்த நிலையில் வெற்றி குறித்து கேப்டன் ரோகித் சர்மா பேசியதை தற்போது பார்க்கலாம். இதுகுறித்து பேசிய அவர், "கடைசி பந்து வீசப்படும் வரை எதுவுமே நிரந்தரம் கிடையாது. ஆட்டம் பாதி முடிந்த பிறகு ஆஸ்திரேலியாவை ஒரு நல்ல இலக்கில் சுருட்டி விட்டோம் என்ற நினைப்பு வந்தது."

"ஆனால் அந்த இலக்கை எட்டுவதற்கு நாங்கள் நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும் என்றும் எனக்கு தெரிந்தது. நாங்கள் நல்ல முறையில் பேட்டிங் செய்ததால் தான் இந்த இலக்கை எங்களால் எட்ட முடிந்தது. நாங்கள் முக்கியமான கட்டத்தில் மிகவும் அமைதியாகவும் பொறுப்பான முறையிலும் விளையாடினோம். இந்த தொடரிலே தற்போது வழங்கப்பட்டுள்ள ஆடுகளம் தான் கொஞ்சம் பேட்டிங் செய்ய சாதகமாக இருந்தது."
"துபாய் ஆடுகளத்தின் தன்மையே இப்படித்தான் இருக்கின்றது. இருப்பினும் ஆடுகளம் எந்த தன்மையில் இருக்கிறது என்பது குறித்து பெரிய அளவில் யோசிக்காமல் நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடுவதில் மட்டுமே கவனம் செலுத்தினோம். தற்போது எங்கள் அணியில் ஆறு வீரர்கள் பவுலிங் வீசுகிறார்கள். இப்படி இருக்க வேண்டும் என்று தான் நான் நினைத்தேன்."
"ஆறு பவுலர்கள் மற்றும் பேட்டிங் வரிசையில் எட்டாவது வீரர் வரை பேட்ஸ்மேன்கள் ஆகியோர் இருக்க வேண்டும். நாங்கள் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியை தேர்வு செய்யும் போது இதை வைத்து தான் அணியை எடுத்தோம். இதுதான் எங்களுடைய வெற்றிக்கு காரணம். இந்த அணியை உருவாக்கிய அனைவருக்கும் பாராட்டுக்கள் சேர வேண்டும்."
"ஆறு பேர் பவுலிங் வீசுவார்கள் என தெரிந்தால், நீங்கள் எப்போது யாரை வேண்டுமானாலும் பந்து வீச அழைக்கலாம்.விராட் கோலி பல ஆண்டுகளாக எங்களுக்கு இதே பணியை செய்து வருகிறார். விராட் கோலி களத்தில் இருக்கும்போது நாங்கள் எந்த பதற்றமும் இல்லாமல் அமைதியாக இருந்தோம். விராட் கோலி, ஸ்ரேயாஸ் பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டும் என்று நினைத்தோம்.இதே போல் இறுதி கட்டத்தில் ஹர்திக் பாண்டியா அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்ததும் எங்களுடைய வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது."
"இந்த தொடரில் எங்களுடைய செயல்பாடு மகிழ்ச்சியை கொடுக்கின்றது. எனினும் இறுதிப் போட்டியில் விளையாடும் போது அணியில் உள்ள அனைத்து வீரர்களும் நல்ல பார்மில் இருக்க வேண்டியது முக்கியம். இதன் மூலம் எங்களுக்கு ஒரு நல்ல உத்வேகம் கிடைக்கும். இறுதிப் போட்டி குறித்து பெரிய அளவு எல்லாம் நாங்கள் யோசிக்கவில்லை."
"நேரம் வரும்போது அதை பற்றி யோசித்து முடிவு எடுப்போம். எங்கள் அணி வீரர்கள் தற்போது கிடைத்திருக்கும் நாளில் ரிலாக்ஸ் ஆக இருக்க வேண்டும் என நினைக்கின்றேன். ஏனென்றால் இந்த தொடர் கடும் அழுத்தத்தையும் நெருக்கடியும் கொடுத்திருக்கிறது. தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து என இரண்டு அணிகளுமே சிறந்த அணிகளாக விளங்குகிறார்கள். இறுதிப் போட்டியில் எதிர்நோக்கி காத்திருக்கிறோம்" என ரோகித் சர்மா கூறினார்.