துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதல் அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி இன்று ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி மதியம் 2:30 மணிக்கு இந்த போட்டி தொடங்கும். இந்த போட்டியை டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இலவசமாகவும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.
இந்த நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கான வழிகள் குறித்து கேப்டன் ரோகித் சர்மாவுக்கு முன்னாள் கேப்டன் கவாஸ்கர் அறிவுரை வழங்கி இருக்கிறார். இது குறித்து பேசிய அவர், "இந்த ஆடுகளம் நிச்சயம் இந்தியாவுக்கு தான் சாதகமாக இருக்கும்."

"ஆஸ்திரேலியாவில் பெரிய அளவு சுழற் பந்துவீச்சாளர்கள் இல்லை. அது மட்டும் இல்லாமல் கம்மின்ஸ், ஹேசல்வுட், ஸ்டார்க் போன்ற முக்கியமான வீரர்கள் இல்லாமல் ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது. இருப்பினும் ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங் சிறப்பாக இருக்கிறது. அவர்களுடைய பேட்டிங் ஆக்ரோஷமாக இருக்கிறது."
"எனவே இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்றால் நிச்சயம் இரண்டாவது தான் பேட்டிங் செய்து சேஸ் செய்ய வேண்டும். ஆஸ்திரேலியாவை சேஸ் செய்ய விடக்கூடாது. துபாய் ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பது போல் பலரும் சொல்கிறார்கள். நீங்கள் ஆரம்ப கட்டத்தில் பார்த்தீர்கள் என்றால், ஆடுகளம் சுழ்ற்பந்துவீச்சுக்கு எந்த ஒரு சாதகத்தையும் தரவில்லை."
"ஆனால் ஆட்டம் போக போக தான் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு சிறிது அளவு உதவி கிடைத்தது. இதற்காக இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்ய முடியாது என்றெல்லாம் கிடையாது. கொஞ்சம் பந்து திரும்புகிறது. ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். தவிர ஆடுகளம் பெரிய அளவில் உதவவில்லை."
"இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யும்போது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். முதல் பத்து ஓவர்கள் விளையாடினால் போதும் என்று நினைப்பில் இருக்கக் கூடாது. எவ்வளவு ஓவர்கள் தொடக்க வீரர்கள் விளையாடுகிறார்களோ அந்த அளவுக்கு இந்திய அணி அதிக ரன்களை குவிக்கும்" என்று கவாஸ்கர் கூறியுள்ளார். கடந்த 2023 உலக கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு தற்போது ரோகித் சர்மா படை பதிலடி கொடுக்க வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.