துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி இன்று அரை இறுதி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. இதில் இந்தியாவுக்கு எப்போதுமே ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் எமனாகவே விளங்கி வருகிறார்.
50 ஓவர் உலகக் கோப்பை இறுதி போட்டி டி20 உலகக்கோப்பை அரை இறுதி போட்டி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி என அனைத்து போட்டிகளிலும் தனி ஆளாக நின்று டிராவிஸ் ஹெட் ரன்களை குவித்திருக்கிறார்.

இதில் t20 உலக கோப்பை தவிர எஞ்சிய இரண்டு போட்டிகளிலுமே ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதனால் டிராவிஸ் விக்கெட்டை விரைவில் வீழ்த்த வேண்டும் என்ற உத்வேகத்தில் இந்திய அணி வீரர்கள் இருந்தனர். இந்த சூழலில் தான் டிராவிஸ் ஹெட் எதிர்கொண்ட முதல் ஓவரின் முதல் பந்திலேயே ஒரு கேட்ச் வாய்ப்பை கொடுத்தார். அந்த கேட்சை முகமது ஷமி தவறவிட்டார்.
இதை மட்டும் முகமது ஷமி முயற்சி எடுத்து பிடித்திருந்தால் ஆட்டமே தலைகீழாக மாறி இருக்கும். இதேபோன்று நான்காவது ஓவர் ஐந்தாவது பந்தில் டிராவிஸ் ஹெட், ஹர்திக் பாண்டியா பந்தில் ஒரு ரன் ஓடினார். அப்போது ஜடேஜா அவரை ரன் அவுட் ஆக முயற்சி செய்தார். ஆனால் பந்து ஸ்டெம்பில் படவில்லை. ஒருவேளை ஸ்டெம்பில் அந்த பந்து பட்டிருந்தால் டிராவிஸ் ஹெட் 11 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட் ஆகி இருப்பார். இப்படி இரண்டு தங்கமான வாய்ப்பை இந்திய வீரர்கள் கோட்டை விட்டதால் ரசிகர்கள் கடும் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள்.
டிராவிஸ் ஹெட் போன்ற வீரர்களுக்கு இப்படி அடிக்கடி வாய்ப்பை கோட்டை விட்டால், அவர் இதனை சிறப்பாக பயன்படுத்தி பட்டையை கிளப்புவார் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே முதல் ஓவரில் ஷமி கேட்ச் மிஸ் செய்த பிறகு ஹெட், ஹர்திக் ஒவரில் ஒரு சிக்சர் ஒரு பவுண்டரி அடித்து இருந்தார்.
அதன் பிறகு ரன் அவுட் வாய்ப்பு மிஸ் ஆன நிலையில் டிராவிஸ் ஹெட் தொடர்ந்து மூன்று பவுண்டர்களை விளாசினார். இதனால் ஆஸ்திரேலியா பவர் பிளேவில் அதிக ரன்களை விளாசி வந்தது. அப்போது வருண் சக்கரவர்த்தி தாம் வீசிய முதல் ஓவரிலேயே டிராவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்தினார். இதனால் ஜீரோ ரன்னில் அவுட் ஆக வேண்டிய டிராவிஸ் ஹெட், தற்போது 39 ரன்களில் அவுட் ஆகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.