தோனி கிளவுஸ் சர்ச்சை
தோனி பயன்படுத்திய ராணுவ முத்திரை பதித்த கிளவுஸ் விவகாரம் பட்டி தொட்டியெல்லாம் பேசப்பட்டு, ஐசிசி தடையால் சர்ச்சை ஆகி, இந்தியா - ஆஸ்திரேலியா போட்டியில் தோனி அதை அணிவாரா? மாட்டாரா? என்ற இடத்தில் வந்து நிற்கிறது.
நான் “கேப்டன்” இல்லை
இந்த நிலையில் இது குறித்து, ரோஹித் சர்மாவுடன் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலில், "எனக்கு இது பற்றி எந்த யோசனையும் இல்லை. நான் "கேப்டன்" இல்லை, எனக்கு என்ன நடக்கிறது என்று தெரியாது. இதைப் பற்றி சொல்ல ஒன்றுமில்லை. நாளை என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்" என்று குறிப்பிட்டார்.
கோலியிடம் கேளுங்கள்
இதில் நன்றாக கவனித்தால், "நான் கேப்டன் இல்லை. என்ன நடக்கிறது என்று தெரியாது" என்று கூறி இந்த சர்ச்சை குறித்து பேசுவதில் இருந்து ஒதுங்கிக் கொண்டுள்ள ரோஹித் சர்மா, மறைமுகமாக கேப்டன் விராட் கோலிக்கு இது பற்றி தெரியும். அவரிடம் போய் கேளுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
அவசியமே இல்லை
கேப்டன் என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தி இருக்க வேண்டிய அவசியமே இல்லை. "இது பற்றி எனக்குத் தெரியாது. அதனால் கருத்து சொல்ல விரும்பவில்லை" என்பதோடு அவர் நிறுத்திக் கொண்டு இருக்கலாம். அப்புறம் ஏன் கோலி பெயரை இழுத்தார்?
உரசல்
விராட் கோலி - ரோஹித் சர்மா இடையே வெளியில் நல்ல உறவு இருந்தாலும், இருவருக்கு இடையேயும் உரசல் இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகும். ஒருமுறை சமூக வலைதளங்களில் விராட் கோலியை பின்பற்றி வந்த ரோஹித் சர்மா, திடீரென்று அதில் இருந்து பின்வாங்கி, கோலியை "அன்ஃபாலோ" செய்தார் என்ற செய்தி வெளியானது.
ஓரங்கட்ட திட்டம்
இது போன்ற மறைமுக உரசல்களுக்கு காரணமாக, கோலி, ரோஹித் சர்மாவை ஓரங்கட்ட திட்டமிட்டு வருகிறார் என கூறப்படுகிறது. முன்பு டெஸ்ட் போட்டிகளில் ரோஹித்துக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்தது. நீண்ட காலம் கழித்து அவருக்கு மீண்டும் டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைத்தது.
கருத்து வேறுபாடுகள்
ரோஹித் சர்மா இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டனாக இருக்கும் நிலையில், கேப்டன்சி விவகாரங்களிலும் ரோஹித் - கோலி இடையே சில கருத்து வேறுபாடுகள் உண்டு என கூறப்படுகிறது. இதெல்லாம் சேர்ந்து தான் தோனி விவகாரத்தில் கேப்டனிடம் போய் கேளுங்கள் என அவர் மறைமுகமாக கூறக் காரணம். தோனி கிளவுஸ் சர்ச்சையிலும் ரோஹித் - கோலி இடையே கருத்து வேறுபாடுகள் இருக்குமோ?