மும்பை : இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா சமீபத்தில் அஸ்வினை அணியில் சேர்ககும் முடிவை எடுத்தார்.
தோனி சொல்லித் தான் இந்த முடிவை ரோஹித் சர்மா எடுத்திருப்பார் என்ற பேச்சு ரசிகர்கள் மத்தியில் அடிபடத் துவங்கி உள்ளது.

தோனி கேப்டனாக தனக்கென தனி வழியை வைத்திருந்தார். தற்போது ரோஹித் சர்மா எடுக்கும் பல முடிவுகள் அப்படியே அவரது பாணியில் உள்ளது. எனவே, தோனியிடம் ரோஹித் சர்மா ஆலோசனைகள் பெறுகிறாரோ? என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி சில சம்பவங்களும் சமீபத்தில் நடந்துள்ளன.
தோனி கேப்டனாக இருந்த சமயத்தில் இந்திய ஆடுகளங்களில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற நோக்கில் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களை தயார் செய்தார். அவர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா.
அவர்கள் சுமாராக ஆடிய போதும் அவர்களை அணியை விட்டு அவர் நீக்காமல் வைத்திருந்தார். அவர்கள் இருவரும் சேர்ந்து பந்து வீசினால் நிச்சயம் எதிரணிகள் திணறும். விராட் கோலி கேப்டனான பின் அஸ்வினுக்கு அணியில் முக்கியத்துவம் குறைந்து கொண்டே வந்தது.
ஆனால், ரோஹித் சர்மா கேப்டன் ஆன பின் அஸ்வின் டெஸ்ட் அணியில் தவிர்க்க முடியாத வீரராக மாறினார். திடீரென அவருக்கு 2022ஆம் ஆண்டு ஒருநாள் தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. தற்போது மீண்டும் உலகக்கோப்பை தொடருக்கு முன் அவருக்கு அணியில் வாய்ப்பு அளிக்கும் நிலையை உருவாக்கி இருக்கிறார் ரோஹித் சர்மா.
ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் அஸ்வின் இடம் பெற்றுள்ளார். அவரது தேர்வு குறித்து தேர்வுக் குழு பேசும் போது கூட அவரது அனுபவம் அணிக்கு முக்கியம் என்றனர். தோனி 2018 ஐபிஎல் தொடரில் வயதான வீரர்களை தேர்வு செய்தார். அவர்களின் அனுபவம் தான் அணிக்கு தேவை எனக் கருதிய தோனி, அவர்களை வைத்தே கோப்பையையும் கைப்பற்றினார். அதே பாணியைத்தான் இப்போது ரோஹித் சர்மாவும் கடைபிடிக்கிறார்.
மேலும், தோனியின் விருப்ப ஜோடியான அஸ்வின் - ஜடேஜாவை மீண்டும் இணைக்கும் வேலையையும் ரோஹித் செய்து வருகிறார். உண்மையில் ரோஹித் சர்மா இதெல்லாம் தானாகவே செய்கிறாரா? அல்லது தோனி சொல்லித்தான் செய்கிறாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.