மெல்போர்ன்: இந்திய அணியின் நட்சத்திர வீரரான சுப்மன் கில் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்படவில்லை என்று கேப்டன் ரோஹித் சர்மா கூறிய கருத்திற்கு கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் காட்டமாக விமர்சித்துள்ளார். சுப்மன் கில் நீக்கப்படவில்லை என்றால், அவர் ஏன் ஓய்வறையில் அமர்ந்திருந்தார் என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான சுப்மன் கில் நீக்கப்பட்டிருந்தார். அவருக்கு பதிலாக இளம் ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டார். ஆனால் வாஷிங்டன் சுந்தருக்கு முதல் இன்னிங்ஸில் 15 ஓவர்களும், 2வது இன்னிங்ஸில் 4 ஓவர்களும் மட்டுமே ரோஹித் சர்மா வழங்கினார்.

ஆல்ரவுண்டராக தேர்வு செய்யப்பட்ட வீரரை கிட்டத்தட்ட ஒரு பேட்ஸ்மேனை ரோஹித் சர்மா பயன்படுத்தியது ரசிகர்களிடையே கடுமையான விமர்சனத்தை சந்தித்து வருகிறது. 2வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணியின் நேதன் லயன் எவ்வளவு சிறந்த பவுலிங்கை வெளிப்படுத்தினார் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படியான ஒரு ஆஃப் ஸ்பின்னருக்கு 2வது இன்னிங்ஸில் 4 ஓவர்கள் மட்டும் ரோஹித் சர்மா வழங்கியுள்ளார்.
இதுகுறித்து ரோஹித் சர்மா செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்திய அணியின் சுப்மன் கில் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்படவில்லை. காம்பினேஷன் சரி வராததால் வெளியில் அமர வைக்கப்பட்டுள்ளார். பிளேயிங் லெவனில் இருந்து பெஞ்ச் செய்யப்பட்டதால், அவர் ரன்கள் சேர்க்கவில்லை, ஃபார்மில் இல்லை என்பது அர்த்தமல்ல என்று கூறியிருந்தார்.
ரோஹித் சர்மாவின் இந்த பதில் இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கரை கொந்தளிக்க வைத்துள்ளது. சுனில் கவாஸ்கர் பேசுகையில், வாஷிங்டன் சுந்தருக்கு எத்தனை ஓவர்கள் பவுலிங் செய்ய வாய்ப்பு கொடுத்தீர்கள்? இந்திய அணியின் தேவைக்கேற்ப ஒரு அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் இருந்து பிளேயிங் லெவனுக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்யப் போகிறீர்கள். அப்போது சுப்மன் கில்லை நீக்கி இருக்கிறீர்கள்.
நீங்கள் என்ன மொழியில் பேசினாலும் சுப்மன் கில் நீக்கப்பட்டது தான் உண்மை. சுப்மன் கில் நீக்கப்படவில்லை, சுப்மன் கில்லை சேர்க்க முடியவில்லை என்று எப்படி கூறினாலும், அதற்கு அர்த்தம் ஒன்று தான். ஏனென்றால் அவர் இறுதியாக ஓய்வறையில் தான் அமர்ந்திருக்கிறார். களத்தில் இறங்கி பேட்டிங் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் சுப்மன் கில் நம்பர் 3 பேட்ஸ்மேனாக விளையாடி வந்தார். கேப்டன் ரோஹித் சர்மா நம்பர் 6 பேட்ஸ்மேனாக களமிறங்கினார். அதேபோல் கேஎல் ராகுல் தொடக்க வீரராக ஆடினார். இதில் கேஎல் ராகுல் நல்ல ஃபார்மில் இருப்பதால் அவரை நம்பர் 6க்கு அனுப்ப முடியாத நிலை வந்தது.
இதனால் கேஎல் ராகுலை நம்பர் 3 பேட்டிங் வரிசையில் களமிறக்கிய ரோஹித் சர்மா, டவுன் தி ஆர்டரில் விளையாடுவதற்கு வாஷிங்டன் சுந்தரை கொண்டு வந்தார். இதனால் சுப்மன் கில் நீக்கப்பட்டது அனைவருக்கும் தெரிந்த ரகசியம் தான். கடந்த 2 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டொல் 39 பேட்டிங் சராசரியுடன் விளையாடி வரும் சுப்மன் கில்லை, 4 ஆண்டுகளாக 31 பேட்டிங் சராசரியுடன் விளையாடி வந்த ரோஹித் சர்மா நீக்கியது தான் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.