சென்னை : இந்திய அணியில் சில எதிர்பார்க்காத நகர்வுகள் நடந்து வருகின்றன.
2023 உலகக்கோப்பை தொடருக்கான அணியை அறிவித்து விட்டாலும் இன்னும் இறுதி செய்யாத இந்திய அணி, தொடர்ந்து காயம் ஏற்பட்ட வீரர்களுக்கு மாற்று வீரர்களை தேடி வருகிறது.
அந்த வகையில் உலகக்கோப்பை அணியில் டெஸ்ட் அணியின் முன்னணி சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின் உலகக்கோப்பை தொடரில் அனைத்து போட்டிகளிலும் ஆடக் கூடிய வாய்ப்பு உள்ளது. அதற்கு அஸ்வின் என்ன செய்ய வேண்டும் என கேப்டன் ரோஹித் - பயிற்சியாளர் டிராவிட் எதிர்பார்க்கிறார்கள் என்பது குறித்து பிசிசிஐ வட்டாரங்களில் ஒரு தகவல் பேசப்பட்டு வருகிறது.

கடந்த ஆறு வருடங்களில் ஒரே ஒரு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மட்டுமே அஸ்வின் ஆடி இருக்கிறார். மற்றபடி அவர் டெஸ்ட் அணியில் மட்டுமே முதன்மை சுழற் பந்துவீச்சாளராக இருக்கிறார். இந்த நிலையில், உலகக்கோப்பை அணியில் இடம் பெற்று இருந்த சுழற் பந்துவீச்சு ஆல் - ரவுண்டர் அக்சர் பட்டேலுக்கு காயம் ஏற்பட்டதால் மாற்று வீரராக வாஷிங்க்டன் சுந்தர் மற்றும் அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
அக்சர் பட்டேல் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் பெறவில்லை என்றால் வாஷிங்க்டன் சுந்தர் தான் அணியில் இடம் பெறுவார். அஸ்வின் அவருக்கும் காயம் ஏற்பட்டால் மட்டுமே அணியில் இடம் பெறுவார் என விமர்சகர்கள் கூறினர். ஆனால், இந்திய அணியில் நிலைமை வேறாக உள்ளது.
வாஷிங்க்டன் சுந்தர் 17 ஒருநாள் போட்டிகளில் ஆடி இருக்கிறார். ஆனால், அதில் 14 இன்னிங்க்ஸில் மட்டுமே பந்து வீசி இருக்கிறார். அதில் அவர் 16 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். அவரது எகானமி 5 ஆகும். அவரது சிறந்த பந்துவீச்சு 30 ரன்களுக்கு 3 விக்கெட் வீழ்த்தியது மட்டுமே.
மறுபுறம் அவரது பேட்டிங்கும் சராசரியாகவே உள்ளது. 9 இன்னிங்க்ஸில் 233 ரன்கள் எடுத்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 29 மட்டுமே. இந்த புள்ளி விவரங்களை வைத்தே அவர் மேட்ச் வின்னராக மாற முடியாது. மேலும், ஐபிஎல் தொடரிலும் அவரை பேட்டிங்கில் மேட்ச் வின்னர் என கூறி விட முடியாது.
தற்போது இந்திய அணிக்கு பேட்டிங் செய்யக் கூடிய ஒரு ஆஃப்-ஸ்பின் வீசக் கூடிய சுழற் பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் தான் தேவை. வாஷிங்க்டன் சுந்தர் அந்த இடத்துக்கு சரியான நபர் இல்லை என்ற எண்ணத்தில் இருக்கும் டிராவிட் - ரோஹித் சர்மா கூட்டணி, அந்த இடத்தை பூர்த்தி செய்ய அக்சர் பட்டேலுக்கு மாற்றாக இருப்பது அஸ்வின் தான் என கருதுகிறது.
அஸ்வின் கடந்த காலங்களில் போட்டிகளில் ஆடவில்லை என கூறப்பட்டாலும், அடுத்து நடைபெற உள்ள ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் அவர் நிச்சயம் அணியில் இடம் பெறுவார் என கூறப்படுகிறது. அந்த இரண்டு போட்டிகளில் அவர் பந்துவீச்சில் சாதிப்பதை விட, பேட்டிங்கில் ரன் குவிக்க வேண்டும் என டிராவிட் - ரோஹித் சர்மா அவரிடம் கூறி இருப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகின்றன.
அஸ்வின் அதன் காரணமாகவே, தமிழ்நாடு அளவிலான கிளப் அணி தொடரில் பங்கேற்று ஒருநாள் போட்டி சூழ்நிலையில் தன் பேட்டிங் எந்த நிலையில் இருக்கிறது என சோதனை செய்து கொண்டார். உள்ளூர் கிளப் தொடரில் ஆடிய அவர் 17 பந்துகளில் 12 ரன்கள் மட்டுமே எடுத்தார். எனினும், அவர் ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக ரன் குவிப்பார் என நம்புவோம்.