மும்பை: சொந்த மண்ணில் படைக்கும் சாதனைகளில் கூட இந்திய அணிக்கு அருகில் கூட இங்கிலாந்து அணியால் செல்ல முடியவில்லை என்று முன்னாள் வீரர் இயன் மோர்கன் தெரிவித்துள்ளார். இதற்கு இந்திய அணிக்குள் இருக்கும் போராட்ட குணமும், ரன்களை குவிக்க வேண்டும் என்ற பசியும் தான் காரணம் எனவும் கூறியுள்ளார்.
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரை இந்திய அணி வென்றுள்ள நிலையில், அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இரண்டையும் மனதில் வைத்து இந்திய அணி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் நடந்த ஐசிசி தொடர்களில் இந்திய அணி குறைந்தபட்சம் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி வந்துள்ளது.

அதேபோல் கடைசியாக சொந்த மண்ணில் நடந்த 18 டெஸ்ட் தொடர்களை இந்திய அணி தொடர்ந்து வென்று வருகிறது. இந்திய மண்ணில் உலகக்கோப்பையை வெல்வதை விடவும், டெஸ்ட் தொடரை வெல்வது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் எவ்வளவு பெரிய ஜாம்பவான் வீரர்கள் காயமடைந்தாலும், ஓய்வு பெற்றாலும், அவர்களுக்கு மாற்றாக இளம் வீரர் ஒருவரை தயாராக பிசிசிஐ வைத்துள்ளது.
கேப்டன் இல்லையென்றால் கூட, அடுத்த கேப்டனையும் தயாராகவே பிசிசிஐ வைத்துள்ளது. இதனால் சர்வதேச கிரிக்கெட்டில் 3 வகையான போட்டிகளிலும் பிசிசிஐ ஆதிக்கம் செலுத்தி வருவதாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்துப் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயன் மோர்கன் பேசுகையில், சொந்த மண்ணில் இந்திய அணியை மிகச்சிறந்த அணி என்று தாராளமாக சொல்லிவிடலாம்.
வெற்றிக்கான பசியுடன் இந்திய அணி வீரர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு போட்டியையும் வெல்ல வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். கடைசி வரை போராட வேண்டும் என்ற குணமும் அவர்களின் மனதில் பதிந்துவிட்டது. எந்த விஷயத்தையும் சாதாரணமாக எடுத்து கொள்வதில்லை. இங்கிலாந்து அணிக்கும் சொந்த மண்ணில் ஏராளமான சாதகமான விஷயங்கள் உள்ளது.
ஆனால் நமது சாதனைகளை, இந்திய அணியின் சாதனையையும் ஒப்பிடவே முடியாது. ரன்கள், வெற்றிகள் என்று அனைத்திலும் இந்திய அணி வேறு உச்சத்தில் உள்ளது. தற்போது இந்திய அணிக்கு முன் இருக்கும் முக்கியமான சவால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தான். தற்போது விளையாடுவது போல் ஆஸ்திரேலியா மண்ணிலும் விளையாடினால், மிகப்பெரிய வெற்றியை பெற முடியும்.
அதேபோல் ஆஸ்திரேலியா அணியின் நேதன் லயனை எப்படி இந்திய பேட்ஸ்மேன்கள் கையாள்கிறார்கள் என்பதை பொறுத்தே அவர்களின் வெற்றி அமையும். ஒருவேளை நேதன் லயனை இந்திய அணியினர் அட்டாக் செய்தால், ஆஸ்திரேலியா வீரர்களுக்கு இடையிலேயே ஏராளமான கேள்விகள் எழும் என்று தெரிவித்துள்ளார்.