அடிலெய்டு: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 264 ரன்களை சேர்த்துள்ளது. இதற்கு இந்திய அணியின் பேட்டிங் வரிசை ஒன் டைமன்ஷனலாக இருப்பது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதனை மாற்ற வேண்டிய தேவை இந்திய அணி நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலுயா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 264 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. பவுலிங்கிற்கு சாதகமான அடிலெய்டு மைதானத்தில் இது சவாலான ஸ்கோர் என்றாலும், இந்திய அணியின் தரத்திற்கு இது போதுமானதாக இருக்கவில்லை.

குறிப்பாக 2027 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் தயாரிப்பிற்கு இந்த தொடர் தொடக்கமாக அமைந்துள்ளது. இன்னும் இரண்டரை ஆண்டுகள் மட்டுமே இருக்கும் நிலையில், புதிய கேப்டன் சுப்மன் கில் இந்திய அணிக்கு என்ன தேவை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அதற்காக வலிமை வாய்ந்த ஆஸ்திரேலியா அணியுடன் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் முக்கியப் பிரச்சனையாக உருவாகி இருப்பது பேட்டிங் வரிசை தான். ஏனென்றால் சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் ஆகிய 4 பேட்ஸ்மேன்களுமே ஒரே மாதிரியான ஆட்ட முறையை கொண்டவர்கள். இவர்கள் ஒன் டைமன்ஷனல் பிளேயர் என்று சொல்ல முடியும். ரோகித் சர்மா மட்டுமே வித்தியாசமான ஸ்டைலில் விளையாடக் கூடியவர்.
ஆனால் உலகக்கோப்பை தொடரின் போது ரோகித் சர்மாவுக்கு 40 வயதாகிவிடும் என்பதால், அந்த ரிஸ்கை இந்திய அணியால் எடுக்க முடியாது. அதேபோல் அக்சர் படேல் மிடில் ஆர்டரில் சேர்த்தாலும், அவரால் பெரிய இன்னிங்ஸை இதுவரை கட்டமைக்க முடிந்ததில்லை. டி20 கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடினாலும், ரிங்கு சிங் அல்லது ரிஷப் பண்ட் போன்ற வீரர்கள் இருப்பதே சரியான முடிவாக இருக்கும்.
அதேபோல் வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் படேல் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு அளிப்பதே நல்ல அணுகுமுறையாக இருக்கும். இருவரில் யார் சிறந்தவர்கள், யாரின் பவுலிங் தேவை என்பதை அறிந்து இந்திய அணி விரைவாக முடிவு எடுக்க வேண்டும். நிதீஷ் குமார் ரெட்டி ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக விளையாடுவதால் எந்த சிக்கலும் இல்லை.
ஆனால் நீண்ட பேட்டிங் வரிசைக்காக ஆல்ரவுண்டர்களை அதிகமாக இந்திய அணியில் சேர்ப்பதை கம்பீர் நிறுத்த வேண்டும். அதேபோல் இடதுகை பேட்ஸ்மேன்களில் கூடுதலாக ஒருவரை டாப் ஆர்டரில் கொண்டு வர வேண்டும். முக்கியமான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரின் ஓய்வை அறிந்து முன்கூட்டியே முடிவு எடுத்தால், அது இந்திய அணிக்கு மிகச்சிறந்த அணுகுமுறையாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.