டெஸ்ட் தொடர்
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்து மூன்றாவது போட்டி சிட்னியில் நடைபெற உள்ளது.
ஹோட்டலில் வீரர்கள்
சிட்னியில் கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் இந்திய வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஒரு ரசிகர் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், ரிஷப் பண்ட் மற்றும் நவ்தீப் சைனி சிட்னியில் ஒரு ஹோட்டலில் உணவருந்த சென்றதாக ஒரு ரசிகர் வீடியோ ஒன்றை பதிவிட்டார்.
நன்றி
மேலும், தனக்கு அடுத்த மேஜையில் அவர்கள் அமர்ந்து இருந்ததாகவும், அவர்கள் உணவுக்கான பில்லை தான் செலுத்தியதாகவும் கூறி ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். பின்னர் இந்திய வீரர்கள் அவரை கட்டியணைத்து நன்றி கூறியதாகவும் கூறி உள்ளார்.
சந்தேகம்
இந்திய வீரர்கள் பாதுகாப்பு வளையத்தை தாண்டி ஹோட்டலுக்கு சென்றார்களா? என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்தது. பலரும் இது குறித்து கேள்வி எழுப்பினர். அதன் பின்னர் தான் அந்த ரசிகர் மீதும் சந்தேகம் எழுந்தது. அவர் வீரர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதாக கூறி இருந்தார்.
புகைப்படம் இல்லை
ஆனால், அந்த புகைப்படத்தை அவர் வெளியிடவில்லை. தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த புகைப்படம் இருப்பதாக கூறி இருந்தார். ஆனால், அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் அவரது நண்பர்கள் மட்டுமே பார்க்கும் வகையில் இருந்தது.
வாய்ப்பில்லை!
மேலும், இந்திய வீரர்கள் சிட்னிக்கு போட்டி நடைபெற இரு தினங்களுக்கு முன்பே செல்வார்கள் என கூறப்படுகிறது. அதாவது ஜனவரி 5 தான் வீரர்கள் அங்கே செல்ல உள்ளனர். இந்த நிலையில் அவர்கள் சிட்னியில் இருக்க வாய்ப்பில்லை. அந்த ரசிகர் உண்மையிலேயே இந்திய வீரர்களை சிட்னியில் கண்டிருக்க வாய்ப்பில்லை!!