மும்பை : ஐசிசி உலக கோப்பையில் இந்திய அணி தோல்வியை தழுவிய பிறகு நடைபெற்ற தொடர் தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடராகும். இந்த தொடரில் முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது ரசிகர்களுக்கு கொஞ்சம் மனநிம்மதியை கொடுத்தது.
இந்த நிலையில் ஹாட்ரிக் வெற்றியை பெற்று விடலாம் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு வில்லனாக பிரசித் கிருஷ்ணா அமைந்தார். கடைசி ஓவரில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது.

இந்த நிலையில் பிரசித் கிருஷ்ணா அல்வா மாதிரி பந்துகளை வீசி ஆஸ்திரேலியா வெற்றிக்கு உதவினார். இறுதிக்கட்டத்தில் ஒரு யாக்கர் பந்துகளை கூட வீச முடியாத ஒரு வீரரை எவ்வாறு உலகக் கோப்பை அணியில் மாற்றுவீரராக சேர்த்தீர்கள் என்று ரசிகர்கள் தற்போது கோபம் அடைந்து வருகிறார்கள். ஹர்திக் பாண்டியா காயம் அடைந்த பிறகு அணியில் மாற்றுவீரராக வந்தவர்தான் பிரசித் கிருஷ்ணா.
கிருஷ்ணாவின் தற்போதைய பந்துவீச்சை பார்த்து விட்டு இவரையா உலகக் கோப்பை அணியில் சேர்த்தீர்கள் என்று ரசிகர்கள் கோபம் அடைந்து வருகின்றனர். எவ்வளவோ நல்ல பந்துவீச்சாளர்கள் உள்ள நிலையில் பிரசித் கிருஷ்ணாவை எந்த அடிப்படையில் சேர்த்தீர்கள் என்று அவர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள். நல்ல வேளை பிரசித் கிருஷ்ணாவுக்கு ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
அப்படி இருந்திருந்தால் இந்திய அணி லீக் சுற்றிலே ஒரு போட்டியில் தோல்வியை தழுவி இருக்கும் என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர்.
பந்துவீச்சுக்கான அடிப்படையே தெரியாத ஒரு வீரருக்கு உலகக்கோப்பை அணியில் எவ்வாறு இடம் கிடைத்தது என்றும் இவ்வாறு சிறு சிறு தவறு செய்வதால் தான் இந்திய அணி பல முக்கியமான போட்டிகளில் தோல்வியை தழுவி வருவதாகவும் ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் பிரசித் கிருஷ்ணாவுக்கு ஆதரவாகவும் ஒரு சில கருத்துக்கள் வைக்கப்படுகிறது. அதாவது பனிப்பொழிவு மிகவும் தீவிரமாக இருந்ததால் பந்து மிகவும் ஈரமாக இருந்ததாகவும் அதனால் பவுலர்களால் தாங்க நினைத்தபடி பந்தை வீச முடியவில்லை என்றும் கூறுகின்றனர். ஒரு போட்டியில் தவறு செய்ததற்காக தூக்கி எறிந்து விடக்கூடாது என்றும் அவர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்துள்ளனர்.