அடிலெய்டு: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாடி வரும் நிலையில், அடிலெய்டு மைதானத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் ரீயூனியன் ஒன்று நடந்திருக்கிறது. ரோகித் சர்மா மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் இருவரும் நீண்ட நேரம் உரையாடியதோடு, இறுதியாக செல்ஃபி ஒன்றையும் எடுத்துக் கொண்டனர்.
2009ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை எவ்வளவு எளிதாக ரசிகர்களால் மறக்க முடியாது. ஏனென்றால் ஆடம் கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணி ஐபிஎல் தொடரை வென்றது. அதேபோல் டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் இருந்து ரோகித் சர்மா, பிரக்யான் ஓஜா உள்ளிட்ட பல்வேறு வீரர்களும் சூப்பர் ஸ்டார்களாக உருவாகினர்.

அதுமட்டுமல்லாமல் ரோகித் சர்மாவுக்கு அப்போதே கில்கிறிஸ்ட் துணைக் கேப்டன் பதவி கொடுத்து தயார் செய்திருந்தார். அப்போது ரோகித் சர்மா பேட்டிங், பவுலிங் இரண்டிலும் அசத்தி கொண்டிருந்தார். இப்போதும் ஐபிஎல் தொடரில் சிறந்த ஆந்தமாக ( Anthem ) டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் ஆந்தமே இருந்து வருகிறது. இதனை ஓஜி ஐபிஎல் ரசிகர்கள் யாராலும் மறுக்க முடியாது.
அதன்பின் டெக்கான் சார்ஜர்ஸ் அணி சில நிதிப் பிரச்சனை காரணமாக கைமாறியது. இதனால் அந்த அணியின் வீரர்கள் பல்வேறு அணிகளுக்கும் பிரிந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனாலும் கில்கிறிஸ்ட் மற்றும் ரோகித் சர்மா இடையில் எப்போது ஒரு பிணைப்பு இருந்து வருகிறது. அது அடிலெய்டு மைதானத்தில் இன்று நடக்கும் போட்டிக்கு முன்பாகவே வெளிப்பட்டது.
ஃபாக்ஸ் கிரிக்கெட் வர்ணனையாளராக ஆடம் கில்கிறிஸ்ட் பணியாற்றி வருகிறார். அதற்காக களத்தில் நின்று பணிகளை மேற்கொண்ட போது, அருகிலேயே ரோகித் சர்மா பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அப்போது இருவரும் சந்தித்துக் கொண்டு நீண்ட நேரமாக உரையாடி கொண்டிருந்தனர். இறுதியாக ரோகித் சர்மாவுடன் ஆடம் கில்கிறிஸ்ட் செல்ஃபி ஒன்றை எடுத்துக் கொண்டார்.
இதனை பார்த்த அடிலெய்டு ரசிகர்கள் உற்சாகத்தில் கரகோஷம் எழுப்ப தொடங்கினர். அதேபோல் சோசியல் மீடியாவில் ரோகித் சர்மா - கில்கிறிஸ்ட் இருவரும் பேசிக் கொண்டதை, டெக்கான் சார்ஜர்ஸ் ரீயூனியன் என்று பதிவிட தொடங்கி இருக்கின்றனர். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.