ஒருநாள் தொடர்
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி மும்பையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
மூன்று துவக்க வீரர்கள்
இந்திய அணியில் ரோஹித், சர்மா, தவான் மற்றும் ராகுல் என மூன்று துவக்க வீரர்களும் முதல் மூன்று இடங்களில் பேட்டிங் செய்தனர். கோலி நான்காம் இடத்தில் பேட்டிங் செய்தார்.
நிதான பேட்டிங்
முன்னதாக தவான் இலங்கை தொடரில் அரைசதம் அடித்து தன் பார்மை நிரூபித்து அணியில் இடம் பெற்றார். இந்தப் போட்டியில் துவக்கத்தில் தவான் மிக நிதானமாக பேட்டிங் செய்தார்.
மெய்டன் ஓவர்
முதல் மூன்று ஓவர்களில் இந்தியா 13 ரன்கள் எடுத்து இருந்தது. ரோஹித் 10 ரன்களும், தவான் 1 ரன்னும் எடுத்து இருந்தனர். இந்த நிலையில், நான்காவது ஓவரை மெய்டன் ஓவராக ஆடினார் தவான்.
ரோஹித் அவுட்
அதனால், ரன் ரேட் சரிந்து அழுத்தம் ஏற்பட்டது. ஐந்தாவது ஓவரில் ரோஹித் சர்மா பவுண்டரி அடிக்க ஆசைப்பட்டு ஸ்டார்க் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
தவான் தான் காரணமா?
ரோஹித் சர்மா அவுட் ஆக தவான் அதற்கு முந்தைய ஓவரில் ரன் அடிக்காமல் இருந்தது தான் காரணம் என ரசிகர்கள் குற்றம்சாட்டத் துவங்கினர். ஒவ்வொரு முறையும் ரோஹித் ரன் அடிக்காமல் ஆட்டமிழக்கும் போதும் இதே குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
விமர்சனம் அடங்கியது
தவான் விரைவாக ஆட்டமிழந்தால், அதற்கு ரோஹித் நிதானமாக ஆடுவது தான் காரணமா? என்றும் சிலர் கேள்வி எழுப்பி இருந்தனர். பின்னர் தவான் அரைசதம் கடந்த பின் இந்த விமர்சனம் அடங்கியது.
அதிரடி காட்டிய தவான்
தவான் முதல் 22 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில், அடுத்த 22 பந்துகளில் 33 ரன்கள் குவித்தார். தொடர்ந்து பவுண்டரி அடித்த அவர் 74 ரன்கள் குவித்து பின் ஆட்டமிழந்தார்.
74 ரன்கள் அடித்த தவான்
தவான் 9 ஃபோர், 1 சிக்ஸ் அடித்து அசத்தினார். தவான் 74, ராகுல் 47 ரன்கள் குவித்தனர். எனினும், அதன் பின் வந்த பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
கோலி ஏமாற்றம்
விராட் கோலி நான்காம் வரிசையில் பேட்டிங் செய்ய களமிறங்கி 16 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். ஸ்ரேயாஸ் ஐயர் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார்.