Ind vs Aus First Test : இந்தியாவோட திட்டமே தப்பு.. அனுபவம் இருந்துமா இப்படி? கவாஸ்கர் விளாசல்
அடிலெய்டு : இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஆன முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பல் ஆட்டம் ஆடியதை கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்க்ஸ் ஆட்டத்தில் 250 ரன்கள் எடுத்து 9 விக்கெட்கள் இழந்துள்ளது. இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் 41 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து அதிர்ச்சி அளித்தனர்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், சிறந்த கிரிக்கெட் விமர்சகருமான கவாஸ்கர், இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மோசமாக ஆட்டமிழந்த விதத்தை சுட்டிக் காட்டி உள்ளார்.

இதெல்லாம் விட்டுருக்கலாமே
இந்திய வீரர்கள் முதல் சில ஓவர்களில் அவுட்சைட் - ஆஃப் திசையில் வந்த பந்தை அடிக்க முற்பட்டு ஆட்டமிழந்தனர். இதில் விராட் கோலியும் அடக்கம். கவாஸ்கர் கூறுகையில், ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தப்படும் கூக்கபுர்ரா வகை பந்து கிட்டத்தட்ட 12 ஓவர்கள் வரை மட்டுமே ஸ்விங் ஆகும். அது வரை பொறுமையாக இருந்து விட்டு பின்னர் இந்திய வீரர்கள் அடித்து ஆடி இருக்கலாம். ஆனால், இப்போதே ரன் அடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஸ்விங் ஆன பந்துகளை அடித்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்துள்ளனர் என்றார்.

அனுபவம் இருந்தும் சொதப்பிட்டாங்க
இது போன்ற விஷயங்களை புதிய வீரர்கள் செய்தால் அதை நாம் புரிந்து கொள்ளலாம். ஆனால், அந்த ஷாட்களை ஆடியது எல்லாமே அனுபவ வீரர்கள் என குத்திக் காட்டினார் கவாஸ்கர்.

அணியின் திட்டமே தப்பு
ஒருவேளை, போட்டிக்கு முன் அணியாக திட்டமிடும் போது நாம் இன்று அடித்து ஆட வேண்டும் என்ற முடிவை எடுத்து இருந்தால், அது நிச்சயம் தவறான முடிவு என அணியின் திட்டமே தவறாக இருக்கலாம் என கூறினார் கவாஸ்கர்.

புஜாரா மாதிரி ஆடணும்
இந்த போட்டியில் மற்ற வீரர்கள் வெளியேறிக் கொண்டு இருந்த போதும் புஜாரா நிலைத்து நின்று ஆடினார். அதை சுட்டிக் காட்டிய கவாஸ்கர், மற்ற வீரர்கள் புஜாரா போல பொறுப்பாக, தனது எல்லைகளை உணர்ந்து, அதிரடியாக எதையும் முயற்சி செய்யாமல் இருந்து இருக்கலாம் என்றார்.


Click it and Unblock the Notifications