சென்னை: கடந்த 6 உலகக்கோப்பை தொடர்களிலும் ஆஸ்திரேலியா அணி தனது முதல் போட்டியில் வென்றிருந்த நிலையில், இன்றைய ஆட்டத்தில் இந்தியாவிடம் தோல்வியை சந்தித்துள்ளது.
உலகக்கோப்பை தொடரின் 5வது லீக் போட்டியில் சமபலம் வாய்ந்த இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவர்களில் 199 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் மீண்டும் ஒரு மோசமான தோல்வியை இந்தியா பெற்றுவிடுமோ என்ற பீதி ரசிகர்களிடையே எழுந்தது. இதன் காரணமாக சேப்பாக்கம் மைதானமே மயான அமைதிக்கு சென்றது.

ஆனால் பின்னர் இணைந்த விராட் கோலி - கேஎல் ராகுல் இணை ஆஸ்திரேலிய பவுலர்களை எளிதாக கையாண்டது. இதன் காரணமாக 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றியை பெற்றது. சிறப்பாக ஆடிய கேஎல் ராகுல் 115 பந்துகளில் 2 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 97 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழந்தால் இருந்தார். சிறப்பாக ஆடிய விராட் கோலி 85 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்த தோல்வியின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் 24 ஆண்டுகள் வரலாற்று சாதனையை முடிவுக்கு வந்தது. அதாவது 1999ல் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் ஸ்காட்லாந்து அணியை ஆஸ்திரேலியா வீழ்த்தியது. பின்னர் 2003ல் ஆஸ்திரேலிய அணி ஆடிய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. பின்னர் 2007 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் போட்டியில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது.
இதனைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா தனது முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது. இப்படி 2015ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியையும், 2019ஆம் உலக்க்கோப்பையில் ஆஃப்கானிஸ்தான் அணியையும் ஆஸ்திரேலியா அணி தனது முதல் போட்டியில் வீழ்த்தியது. கடந்த 6 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் போட்டியில் தோல்வியடைந்ததாக வரலாறே இல்லை.
அந்த வரலாற்றை 2023 உலகக்கோப்பை தொடரில் இந்தியா மாற்றியுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியின் சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் இனி ஐசிசி தொடர்களில் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம் முடிவுக்கு வரும் என்று தெரிவித்து வருகின்றனர்.