மெல்போர்ன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரராக ஜெய்ஸ்வால் களமிறங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. தலைமைப் பயிற்சியாளர் கம்பீர் மற்றும் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் இருவரும் வலைப்பயிற்சியின் போது ஜெய்ஸ்வாலுடன் நீண்ட நேரம் உரையாடியது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை அடிலெய்டு மைதானத்தில் நடக்கவுள்ளது. 17 ஆண்டுகளாக அடிலெய்டு மைதானத்தில் ஆஸ்திரேலியா அணி எந்தவொரு ஒருநாள் போட்டியிலும் தோல்வி அடைந்ததே கிடையாது. ஏற்கனவே முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.

இதனால் 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தால், ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா அணி எளிதாக வென்றுவிடும். இதனால் இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் இணைந்து பயிற்சி மேற்கொண்டனர்.
அப்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகிய இருவரும் ஜெய்ஸ்வாலுடன் நீண்ட நேரமாக ஆலோசனை நடத்தினர். இதனால் 2வது ஒருநாள் போட்டியில் ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற குழப்பமும் எழுந்துள்ளது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் கில் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கி வருகின்றனர்.
முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா வெறும் 8 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ஜெய்ஸ்வாலுக்கு உடனடியாக வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம்தான். இதுவரை ஒரேயொரு ஒருநாள் போட்டியில் மட்டுமே ஜெய்ஸ்வால் விளையாடி இருக்கிறார். அதனால் ரோகித் சர்மாவின் இடத்திற்கு ஜெய்ஸ்வால் விரைவாக கொண்டு வரப்படுவாரா என்பதும் கேள்வி தான்.
இந்திய அணியில் இருந்து ரோகித் சர்மா ஓரங்கட்டப்பட்டால் மட்டுமே, ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஏற்கனவே தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் பேசுகையில், ஜெய்ஸ்வால் 3வது தொடக்க வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போதைக்கு கில் - ரோகித் கூட்டணியே ஓபனிங் இணையாக தொடரும்.
ஜெய்ஸ்வாலுக்கு போதுமான வாய்ப்பு கிடைக்காததால், அவரின் மகத்துவம் ஒருநாள் கிரிக்கெட்டில் வெளிப்படவில்லை என்று கூறி இருந்தார். இருந்தாலும் திடீரென கம்பீர் மற்றும் அகர்கர் இருவரும் ஜெய்ஸ்வாலுடன் நெட்ஸிலேயே நீண்ட நேரம் ஆலோசித்திருப்பது குழப்பங்களை ஏற்படுத்தி இருக்கிறது.