மும்பை : இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 14ஆம் தேதி பிரஸ்பேன் நகரில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணி தற்போது பிரிஸ்பேனில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியதால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ஹர்பஜன் சிங், புஜாரா போன்ற வீரர்கள் அஸ்வினை நீக்கிவிட்டு வாஷிங்டன் சுந்தரை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இந்திய அணியில் தற்போது நன்றாக விளையாடிக் கொண்டிருக்கும் நிதிஷ் குமாரை மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில் இருந்து கம்பீர் நீக்க போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
நிதீஷ் குமார் பந்துவீச்சில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் பேட்டிங்கில் அவர் அபாரமாக விளையாடி வருகிறார். இந்திய அணியின் மற்ற வீரர்கள் எல்லாம் தடுமாறியபோது கீழ் வரிசையில் அவர் அதிரடியாக ரன்களை சேர்த்து வருகிறார்.முதல் டெஸ்ட் போட்டியில் 41 ரன்கள் மற்றும் 38 ரன்கள் எடுத்த நிதிஷ்குமார் பந்துவீச்சில் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
இதேபோன்று இரண்டாவது டெஸ்டிலும் இரண்டு இன்னிங்ஸிலுமே தலா 42 ரன்கள் குவித்து பந்துவீச்சிலும் ஒரு விக்கெட் எடுத்தார். இப்படி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தன்னுடைய திறமையை அவர் நிரூபித்து வருகிறார்.
இந்த சூழலில் நித்திஷ் குமாரை நீக்கிவிட்டு ஒரு வேகப்பந்துவீச்சாளரை சேர்க்க வேண்டும் என்ற யோசனையில் கம்பீரும் ரோகித் சர்மாவும் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதற்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். நிதிஷ்குமார் அபாரமாக பேட்டிங் செய்து வந்து அணியை காப்பாற்றி வருவதாக குறிப்பிடும் ரசிகர்கள் நிதிஷ்குமாரை அணியை விட்டு நீக்குவது தற்கொலைக்கு சமம் என்றும் சாடி இருக்கிறார்கள்.