பெர்த்: இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி வரும் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பெர்த் நகரில் நடைபெறுகிறது.
இந்த போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் ஏற்கனவே ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்று விட்டனர். இதை அடுத்து எந்த ஒரு ஓய்வும் இன்றி இந்திய அணி வீரர்கள் இன்று வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது விராட் கோலி, ரோஹித் சர்மா, ஆர்ஸ்தீப் சிங் உள்ளிட்ட வீரர்கள் பேட்டிங் பயிற்சி செய்து கொண்டு இருந்தனர்.

ரோகித் சர்மா அரை மணி நேரத்திற்கு முன்பே வலை பயிற்சியில் வந்து ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதனை அடுத்து வலை பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ரோகித் சர்மாவை அழைத்த பயிற்சியாளர் கம்பீர் அவரிடம் நீண்ட நேரம் தனியாக பேசினார்.
அப்போது இருவரும் பல விஷயங்கள் குறித்து விவாதித்தனர். இதில் ரோகித் சர்மாவின் பங்கு அணியில் என்ன என்பது குறித்து பயிற்சியாளர் கம்பீர் விவரித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது. அதில் கேப்டன் பதவியில் இருந்து தாம் எதற்கு நீக்கப்பட்டீர்கள்? எதற்கு கில் அணியில் கேப்டனாக அறிவிக்கப்பட்டார் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டதாக தெரிகிறது.
அத்துடன் இல்லாமல் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் பங்கு இளம் வீரர்கள் அடங்கிய இந்த அணிக்கு மிகவும் முக்கியம் என்றும் இதனால் எந்த ஒரு சுமையும் இன்றி சுதந்திரமாக விளையாடும் படியும் ரோகித் சர்மாவுக்கு கம்பீர் அறிவுறுத்தினார் என தெரிகிறது.
அதனைத் தொடர்ந்து புதிய கேப்டனாக கில் பதவி ஏற்றுள்ள நிலையில் அவருக்கு கிரிக்கெட் நுணுக்கங்கள் மற்றும் கேப்டன்ஷிப் எப்படி செய்ய வேண்டும் என்று களத்தில் வழிநடத்த வேண்டும் என்றும் கம்பீர் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.
அதன்பின் போட்டியை எவ்வாறு அணுகலாம் எந்த வீரர்கள் தேர்வு செய்யலாம் என்பது குறித்து களத்தில் ரோகித் சர்மாவுடன் கம்பீர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை நடந்தபோது சுப்மன் கில் அருகில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி பேட்டிங் வலை பயிற்சிக்காக தன்னை தயார் படுத்திக் கொண்டிருந்தார். 2027 உலக கோப்பை தொடரின் போது ரோகித் சர்மாவுக்கு 40 வயது விராட் கோலிக்கு 38 வயதாகவும் இருக்கும் இதனால் கோலியை விட ரோகித் சர்மா தான் தற்போது நெருக்கடி அதிகரித்து இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.