டெல்லி: இந்திய ஒரு நாள் அணியின் கேப்டன் என்ற அரியணையில் அமர சுப்மன் கில்லே தகுதியான நபர் என கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளது ரோகித் சர்மா ரசிகர்களை கோபமடைய வைத்திருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டிக்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த கௌதம் கம்பீர் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது முதல் கேள்வியாக 2027 உலக கோப்பை தொடருக்கு விராட் கோலியும், ரோகித் சர்மாவும் பங்கு பெறுவார்களா என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.

அதற்கு நேரடியான பதிலை சொல்லாமல் கம்பீர் மழுப்பி விட்டார். இது குறித்து பேசிய அவர், உலகக் கோப்பைக்கு இன்னும் இரண்டரை ஆண்டுகள் இருக்கின்றது. எனவே அதைக் குறித்து தற்போது யோசிக்க தேவையில்லை. எப்போதுமே நிகழ்காலத்தில் இருக்க வேண்டும் அதுதான் முக்கியம்.
இருவருமே திறமை வாய்ந்த வீரர்கள் இருவருக்குமே ஆஸ்திரேலிய தொடர் மிகவும் வெற்றிகரமாக அமைய வேண்டும் என்று நம்புகிறேன் என்று பதில் அளித்தார். தொடர்ந்து கில்லுக்கு ஒரு நாள் அணியின் கேப்டன் பதவி வழங்கப்பட்டது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த கம்பீர், யாரும் கில்லுக்கு எந்த ஒரு ஆதரவான நடவடிக்கையுமே எடுக்கவில்லை.
ஏனென்றால் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் என இரண்டு பிரிவிலும் கேப்டனாக அவருக்கு தகுதி இருக்கின்றது. அந்த அரியணையில் அமர தற்போது சுப்ம்ன் கில்லே தகுதியானவர். எதிர்பார்த்த அளவைவிட சிறப்பாக அணி செயல்பட்டு இருக்கிறது. அதற்கு சுப்மன் கில்லை தான் நாம் பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும்.
நமது மரியாதையை சுப்மன் கில் சம்பாதித்து இருக்கின்றார். சரியான விஷயத்தை அவர் பேசுகிறார். சரியான விஷயத்தை அவர் செய்கிறார் என்று கௌதம் கம்பீர் பாராட்டியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிக்கொண்ட தொடர் வரும் 19ஆம் தேதி பெர்த் நகரில் தொடங்குகிறது. இதற்காக நாளை புதன்கிழமை இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு செல்கிறது. விராட் கோலி, ரோகித் சர்மாவின் சர்வதேச கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கு இது மிக முக்கிய தொடராக பார்க்கப்படுகிறது.