மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி மூன்று ஒரு நாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் ஒரு நாள் தொடரில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் தோல்வியை தழுவிய நிலையில், டி20 தொடரை இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதில் ஒரு நாள் தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் இடம் பிடித்தது கம்பீருக்கு பிடிக்கவில்லை என்றும் அவர் இளம் வீரர்களை நோக்கி செல்ல வேண்டும் என்று கூறியதாகவும் செய்திகள் வெளியானது. இந்த தொடரில் ரோஹித் சர்மா அபாரமாக செயல்பட்டு தொடர் நாயகன் விருதை வென்றார்.

விராட் கோலி, கடைசி ஒரு நாள் போட்டியில் அரை சதம் அடித்து விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்தார். எனினும் தனிப்பட்ட வீரர்களின் இன்னிங்சை தம்மால் கொண்டாட முடியாது என்றும் அணியின் வெற்றி தான் முக்கியம் என்றும் கம்பீர் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர்,எனக்கு எப்போதுமே தனிப்பட்ட வீரர்களின் செயல்பாடுகள் குறித்து கவலைப்படவோ, கொண்டாடவோ மாட்டேன்.
சில வீரர்களின் தனிப்பட்ட செயல்பாடுகளை நாம் பாராட்டலாம். ஆனால் ஒரு நாள் தொடரை நாம் இழந்துவிட்டோம். அதுதான் மிகவும் முக்கியம். ஒரு பயிற்சியாளராக, ஒரு நாள் தொடரை நாம் இழந்ததை என்னால் கொண்டாட முடியாது. ஆனால் ஒரு வீரராக மற்ற வீரரின் தனிப்பட்ட சாதனைகளை செயல்பாடுகளை பாராட்ட முடியும். இதுதான் என்னுடைய கோட்பாடு. நான் மட்டுமல்ல ஒவ்வொரு தனி நபர்களும்,ஒட்டுமொத்த தேசமும் தொடரை இழந்ததை எப்போதுமே கொண்டாடக்கூடாது.
ஏனென்றால் நாம் நம் நாட்டுக்காக விளையாடுகிறோம். டி 20 தொடர் கொஞ்சம் வித்தியாசமாக அமைந்தது. அதில் நாம் வெற்றியை பெற்றோம்.தொடரையும் கைப்பற்றினோம். பல நல்ல விஷயங்களும் நடந்தது. ஆனால் இன்னும் மூன்று மாதம் தான் டி20 உலக கோப்பைக்கு இருக்கிறது. இந்த கட்டத்தில்,நான் எங்கு இருக்க வேண்டும் என்று நினைத்தோமோ அங்கு இந்திய அணி இல்லை என்பது உண்மை. நாங்கள் டி20 தொடரை விட உலக கோப்பை காண அணியை தயார் செய்ய வேண்டும் என்பதில்தான் கவனமாக இருந்தோம். உலகக்கோப்பை வந்தவுடன் அதற்கு தகுந்த மாதிரி மனநிலையில் நாங்கள் மாறி விடுவோம் என்று நம்புகிறேன் என கம்பீர் தெரிவித்துள்ளார்.