அடிலெய்ட் : இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் ஆறாம் தேதி அடிலெய்ட் நகரில் பகல்- இரவு போட்டியாக நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா, கில் விளையாடாத நிலையில் கே.எல். ராகுல் தான் தொடக்க வீரராக களம் இறங்கி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்த சூழலில் ரோகித், கில் இருவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் திரும்பி இருக்கிறார்கள். இதனால் யார் தொடக்க வீரராக களமிறங்குவது? யார் நடு வரிசையில் களமிறங்குவது என்பது தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

38 வயதான ரோஹித் சர்மா இதுவரை தொடக்க வீரராக 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2685 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 44 ஆகும். இதில் ஒன்பது சதம் அடங்கும். எனினும் ரோகித் சர்மா கடந்த சில போட்டிகளாக சரியான பார்மில் இல்லை. பயிற்சி ஆட்டத்திலும் மூன்று ரன்களில் ஆட்டம் இழந்தார்.
இதனால் ரோகித் சர்மா நடு வரிசையில் களமிறங்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அளித்துள்ள பேட்டி ஒன்றில் ரோகித் சர்மா அடிலெய்டில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் நம்பர் 5 அல்லது ஆறாவது வீரராக களம் இறங்குவார் என்று நான் நினைக்கவில்லை.
ரோகித் சர்மா ஜெய்ஸ்வாலுடன் தொடக்க வீரராக களமிறங்குவார். கே எல் ராகுல் நம்பர் மூன்றாவது வீரராக விளையாடலாம். இல்லையென்றால் முதல் மூன்று இடங்களைத் தாண்டி ரோகித் சர்மா களமிறங்க மாட்டார். ரோகித் சர்மா நம்பர் ஆறாவது வீரராக களமிறங்குவது அணிக்கு சரியான ஒரு விஷயமாக இருக்காது.
டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை முதல் நான்கு வீரர்கள் தான் அணியின் நான்கு தூண்கள் ஆக கருதப்படுவார்கள். இதனால் ரோகித் சர்மா டாப் 4 வரிசையில் களமிறங்குவதன் மூலம் அணியின் பலத்தை தான் அதிகரிப்பார் என்று ஹரபஜன்சிங் கூறியுள்ளார். இந்த நிலையில் கில்லும் காயத்திலிருந்து திரும்பி இருப்பதால் அவர் மூன்றாவது வீரராக களம் இறங்க கூடும். அண்மையில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் ரோகித் சர்மா நடுவரிசையில் களம் இறங்கி ஆட்டம் இழந்தது குறிப்பிடத்தக்கது.