சென்னை: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ளது.
இதற்காக இரு அணி வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த போட்டியில் இந்திய அணியின் பவுலிங் பலமாக இருந்தாலும், ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கும் சம பலமாக உள்ளது. டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், லபுஷேன், மேக்ஸ்வெல், கேரி என்று ஆட்டத்தை எந்த நேரத்திலும் மாற்றக் கூடிய வீரர்கள் ஆஸ்திரேலிய அணியில் உள்ளனர்.

குறிப்பாக ஸ்டீவ் ஸ்மித் விளையாடும் கடைசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் என்பதால், அவர் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள அவர், முக்கியப் போட்டிகளில் சிறப்பாக விளையாடக் கூடிய வீரராவார். குறிப்பாக ஆஸ்திரேலிய அணியில் எப்போது சிக்கலில் சிக்கினாலும் ஸ்டீவ் ஸ்மித் களத்தில் இருந்தால், எதிரணிக்கு தான் அங்கு அழுத்தம் இருக்கும்.
உலகக்கோப்பை தொடருக்காக ஸ்டீவ் ஸ்மித் மிகச்சிறப்பாக தயாராகி வந்துள்ள நிலையில், அவரது விக்கெட்டை வேகமாக வீழ்த்துவது இந்திய அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த நிலையில் ஸ்டீவ் ஸ்மித்தை வீழ்த்த இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா சரியான திட்டம் ஒன்றை வைத்துள்ளது தெரிய வந்துள்ளது.
நேற்று செய்தியாளர் சந்திப்பின் போது, ஹர்திக் பாண்டியாவை 3வது வேகப்பந்துவீச்சாளராகவே பார்க்கிறோம். அவரா சீராக 140 கிமீ வேகத்தில் பந்துவீச முடிவதால் கூடுதல் ஒரு ஸ்பின்னருடன் சேப்பாக்கம் போட்டியில் களமிறங்க முடியும் என்று கூறியுள்ளார். இதனால் ஹர்திக் பாண்டியாவின் பவுலிங் மூலம் ரோகித் சர்மா திட்டம் வைத்துள்ளது தெரிய வந்துள்ளது.
இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித்திற்கு 75 பந்துகள் வீசியுள்ள ஹர்திக் பாண்டியா, அவரை 5 முறை விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். இதனால் இன்றைய ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் விரைந்து களமிறங்கும் பட்சத்தில் உடனடியாக ஹர்திக் பாண்டியாவை கொண்டு ரோகித் சர்மா அட்டாக் செய்வார் என்று எதிர்பார்க்கலாம்.