மும்பை: மகளிர் உலகக்கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நிலையில், இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் நட்சத்திர வீராங்கனை ஜெமீமா ரோட்ரிக்ஸ் இருவரும் கண்ணீருடன் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 49.5 ஓவர்களில் 338 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதனால் இந்திய அணிக்கு 339 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதன்பின் களமிறங்கிய இந்திய அணியில் ஜெமீமா ரோட்ரிக்ஸ் கடைசி வரை களத்தில் இருந்து 134 பந்துகளில் 14 பவுண்டரிகள் உட்பட 127 ரன்களை விளாசி அசத்தினார். சிறப்பாக ஆடிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 89 ரன்கள் எடுத்து அசத்தினார். இதன் மூலமாக இந்திய அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
அதேபோல் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதிபெறுவது 3வது முறையாகும். இதற்கு முன்பாக 2005 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் உலகக்கோப்பை இறுதிக்கு முன்னேறி இருக்கிறது. மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்துவது என்பது 2000 முதல் 2007 வரையிலான ஆடவர் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியது போன்றதாகும்.
ஏராளமான முறை ஆஸ்திரேலியா அணியிடம் இந்திய மகளிர் அணி தோல்வியை சந்தித்தது. ஆனால் சொந்த மண்ணில் இம்முறை ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இந்திய அணி சாதித்துள்ளது. ஆஸ்திரேலியா அணியை வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் நட்சத்திர வீராங்கனை ஜெமீமா ரோட்ரிக்ஸ் இருவரும் கண்ணீருடன் கொண்டாடினர்.
அதிலும் சதம் விளாசிய ஜெமீமா ரோட்ரிக்ஸ் அரைசதம் அடித்த போதும் சரி, சதம் அடித்த போதும் சரி.. எந்த வகையிலும் கொண்டாடவில்லை. ஆனால் வெற்றிக்கு பின் ஜெமீமா ரோட்ரிக்ஸ் ஆனந்த கண்ணீருடன் பேசிய வார்த்தைகள் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோல் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இறுதிப்போட்டியிலும் இந்திய வீராங்கனை வென்று புதிய வரலாறு படைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.