பெர்த்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். ஆஸ்திரேலியா மைதானம் என்பதால் 3 வேகப்பந்துவீச்சாளர்கள், 2 ஸ்பின் ஆல்ரவுண்டர்களுடன் இந்திய அணி களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை பெர்த் மைதானத்தில் நடக்கவுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின் இந்திய அணி மீண்டும் ஒருநாள் கிரிக்கெட் பக்கம் திரும்பி இருக்கிறது. அதேபோல் புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாட உள்ளனர்.

சுமார் 5 மாதங்கள் இரு வீரர்களும் ஓய்வில் இருந்த நிலையில், தற்போது மீண்டும் கிரிக்கெட் களம் திரும்ப உள்ளனர். இந்த நிலையில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா பிட்ச் என்பதால், 3 வேகப்பந்துவீச்சாளர்கள் கட்டாயம் இருப்பார்கள் என்று தெரிகிறது.
ஆனால் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பும்ரா சேர்க்கப்படவில்லை. இதனால் யாருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்ற கேள்விகளும் உள்ளது. அதன்படி தொடக்க வீரர்களாக முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவும், புதிய கேப்டன் சுப்மன் கில்லும் களமிறங்குவது நிச்சயம். இதனால் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு ஃபீல்டிங் செய்ய மட்டுமே வாய்ப்பு கிடைக்கும்.
அதேபோல் நம்பர் 3 பேட்டிங் வரிசையில் ஆஸ்தான விராட் கோலி இடம்பெறுவார். அதன்பின் துணைக் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், விக்கெட் கீப்பராக கேஎல் ராகுல் ஆகியோர் அடுத்தடுத்து இடம்பெறுவார்கள். இதன்பின் அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இரு ஆல்ரவுண்டர்களும் கட்டாயம் இடம்பெற வாய்ப்புகள் உள்ளது.
அதேபோல் முதல்நிலை ஸ்பின்னராக குல்தீப் யாதவ் இடம்பெறுவார். அதன்பின் 3 வேகப்பந்துவீச்சாளர்களாக முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. பிரசித் கிருஷ்ணா மற்றும் ஹர்சித் ராணா இருவரில் பிரசித் கிருஷ்ணா சிறந்த ஃபார்மில் இருக்கிறார்.
டெஸ்ட் கிரிக்கெட்டிலும் பிரசித் கிருஷ்ணா சிறப்பாக ஆடி வருவதால், அவருக்கு தொடர் வாய்ப்புகள் அளிக்க முடிவு எடுக்கப்படலாம். அதேபோல் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் நிதீஷ் குமார் ரெட்டி பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டுள்ளதால், அவரை பிளேயிங் லெவனில் கொண்டு வர கம்பீர் சில முடிவுகளை எடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்திய மாதிரி பிளேயிங் லெவன்: ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்