மெல்போர்ன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் எவ்வளவு முயற்சித்தும் ரன்கள் அடிக்க முடியாதது ஏமாற்றம் அளிப்பதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். மனதளவிலேயே இது சவால் அளிப்பதாக கூறிய அவர், ரன்கள் அடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் பலன் தரவில்லை என்று கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக கேப்டன் ரோஹித் சர்மா அமைந்துள்ளார். ஏற்கனவே பேட்டிங்கில் சொதப்பி வந்த ரோஹித் சர்மா, தற்போது கேப்டன்சியிலும் சொதப்பி வருகிறார். இதனால் 4வது டெஸ்ட் தோல்விக்கு ரோஹித் சர்மா பொறுப்பேற்று ஓய்வை அறிவிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.

அப்படி இல்லையென்றால் ரஹானே, புஜாராவை போல் இந்திய அணியில் இருந்து தேர்வு குழு நீக்க வேண்டும் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். ஏனென்றால் இதுவரை ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டியில் மொத்தமாக 5 இன்னிங்ஸில் 31 ரன்களை மட்டுமே ரோஹித் சர்மா சேர்த்திருக்கிறார். நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் 6 இன்னிங்ஸில் 92 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தார்.
கிட்டத்தட்ட 3 டெஸ்ட் தொடர்களில் ரோஹித் சர்மாவால் பேட்டிங்கில் ஃபார்முக்கு வர முடியவில்லை. இந்த நிலையில் தோல்விக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து ரோஹித் சர்மா பேசுகையில், என்னுடைய பேட்டிங் நிச்சயம் ஏமாற்றத்தை அளிக்கிறது. ஒரு பேட்ஸ்மேனாக சில விஷயங்களை செய்ய முயற்சிக்கிறேன். ஆனால் அவை எதுவும் பலன் கொடுக்கவில்லை. இதனால் மனதளவிலேயே சவாலாக இருக்கிறது.
அதில் இருந்து வெளிவர முயற்சிக்கிறேன். அதேபோல் இந்திய அணியில் என்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதை பார்க்கிறேன். தனித்தனியாக வீரர்களின் ஆட்டத்தை பார்ப்பதில்லை. குழுவாக இணைந்து மேற்கொள்ள வேண்டிய விஷயங்களை பார்க்கிறோம். இன்னும் ஒரு ஆட்டம் மீதம் இருக்கிறது. அந்த போட்டியில் வென்றால் 2-2 என்ற தொடரை நிறைவு செய்ய முடியும்.
இந்த டெஸ்ட் தொடரை டிரா செய்வதும் மகிழ்ச்சியே என்று தெரிவித்துள்ளார். சிட்னி மைதானம் இந்திய வீரர்களின் ஆட்டங்களுக்கு எளிதாக ஒத்துப் போகும் வகையில் இருக்கும். ஆனால் பேட்டிங்கில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இளம் வீரர்களுக்கு விட்டுக் கொடுத்து விலக் விரும்பாததால், இந்திய அணி சிக்கலை சந்தித்து வருவதாக பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தொடர்ச்சியாக ஒரு வெற்றியை கூட பெறாமல் 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளார். நியூசிலாந்து டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் தோல்வியடைந்த சூழலில், தற்போது ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்கிய 2 போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது.