மெல்போர்ன்: இந்திய அணியின் நட்சத்திர வீரரான ஜஸ்பிரிட் பும்ராவுக்கு சவால் அளிக்கும் வகையில் விளையாட தயாராக இருப்பதாக ஆஸ்திரேலியா அணிக்காக அறிமுகமான உள்ள சாம் கோன்ஸ்டாஸ் தெரிவித்துள்ளார். பும்ராவின் பந்துகளை எதிர்கொள்ள ஆர்வமாக இருப்பதாக கூறிய அவர், தனது திட்டங்களை எளிமையாக வைத்து கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியா அணியின் ஜாம்பவானான டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து வெளியேறிய பின், அவருக்கான சரியான மாற்று வீரரை கண்டறிய முடியாமல் அந்த அணி திண்டாடி வருகிறது. கடந்த ஓராண்டாக ஸ்டீவ் ஸ்மித் தொடக்க வீரராக விளையாடி வந்த சூழலில், இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபியில் மீண்டும் நம்பர் 4ல் களமிறங்க தொடங்கியுள்ளார்.

இதன் காரணமாக தொடக்க வீரராக நேதன் மெக்ஸ்வீனி அறிமுகம் செய்யப்பட்டார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அவர், 6 இன்னிங்ஸ்களில் வெறும் 72 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். அதில் ஒரேயொரு முறை மட்டுமே 10 ரன்களுக்கு மேல் மெக்ஸ்வீனி சேர்த்திருப்பதால், மிடில் ஆர்டரில் வரும் வீரர்களுக்கு கூடுதல் அழுத்தம் ஏற்பட்டது. லபுஷேன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் புதிய பந்தை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்தது.
அதேபோல் அனுபவ வீரரான உஸ்மான் கவாஜாவும் கடைசியாக விளையாடிய 12 இன்னிங்ஸ்களில் ஒரேயொரு அரைசதம் மட்டுமே அடித்திருக்கிறார். இதனால் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்கள் இருவருமே பும்ராவை பவுலிங்கை எதிர்கொள்ள தடுமாறி வருவதாக ரசிகர்கள் விமர்சிக்க தொடங்கினர். இந்த நிலையில் கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான ஆஸ்திரேலியா அணியில் சாம் கோன்ஸ்டாஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
19 வயதேயான இளம் வீரரான சாம் கோன்ஸ்டாஸ் இதுவரை ஆஸ்திரேலியா அணிக்காக எந்த போட்டிகளிலும் அறிமுகம் செய்யப்படவில்லை. பிங்க் பால் டெஸ்ட் போட்டிக்கு முன் இந்திய அணிக்கு எதிராக நடந்த பயிற்சி ஆட்டத்தில் 97 பந்துகளில் 107 ரன்களை விளாசி இருந்தார். அதிரடியாக ரன்கள் சேர்ப்பவர் என்பதால், சாம் கோன்ஸ்டாஸ் இந்திய அணிக்கு சிக்கலை கொடுக்கலாம் என்று பார்க்கப்படுகிறது.
இருந்தாலும் பயிற்சி ஆட்டத்தின் போது பும்ரா ஒரு ஓவரை கூட சாம் கோன்ஸ்டாஸ்-க்கு வீசவில்லை. இதனால் புதிய பந்தில் பும்ராவை சமாளிப்பாரா என்பதே ஆஸ்திரேலியா ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. இதுகுறித்து சாம் சாம் கோன்ஸ்டாஸ் பேசுகையில், பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்கு முன்பாக பும்ரா பவுலிங் செய்யும் வீடியோக்களை அதிகளவில் பார்க்க போவதில்லை. ஏனென்றால் பும்ராவின் பவுலிங்கை போதுமான அளவிற்கு பார்த்துவிட்டேன்.
பும்ராவுக்கு சவால் அளிக்கும் வகையில் எதிர்த்து விளையாட ஆர்வமாக இருக்கிறேன். இந்திய அணியின் ஒவ்வொரு பவுலர் குறித்தும் எங்களின் அனலிஸ்ட் சில தகவலை கொடுப்பார். அதனை பார்த்து, எனது திட்டங்களை உருவாக்கி கொள்வேன். பாக்ஸிங் டே டெஸ்டில் சிறப்பாக விளையாடுவேன் என்பதில் நம்பிக்கையாக இருக்கிறேன். இந்தப் போட்டிக்கு தயாராகுவதற்கு அனைத்து வகையான பயிற்சியையும் செய்துள்ளேன்.
தற்போது வித்தியாசமாக எதையும் முயற்சிக்காமல், திட்டங்களை எளிதாக வைத்து கொள்ள வேண்டும். குழந்தையாக இருக்கும் போதில் இருந்தே ஆஸ்திரேலியா அணிக்காக அந்த பேகி க்ரீன் தொப்பியை அணிந்து விளையாட வேண்டும் என்பதே கனவு. அதனால் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்காக அறிமுகமாவது பெருமை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.