மெல்போர்ன்: மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய போது பும்ராவை முதமுறையாக நெட்ஸில் எதிர்கொண்ட அனுபவம் குறித்து ஆஸ்திரேலியா ஜாம்பவான் மைக் ஹசி பேசி இருக்கிறார். அந்த நேரத்திலேயே பும்ராவின் பந்துகளை எதிர்கொள்ள சிரமத்தை சந்தித்ததாக கூறிய அவர், தேசிய அளவிலான கிரிக்கெட்டுக்கு வருவார் என்று நினைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
2012 முதல் 2020 வரை விராட் கோலியை ஆஸ்திரேலியா ரசிகர்கள் எப்படி கொண்டாடி வந்தார்களோ, அதேபோல் இப்போது பும்ராவை கொண்டாடி வருகின்றனர். பேட் கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க் மற்றும் ஹேசல்வுட் போன்ற மூன்று பெரும் ஜாம்பவான் வேகப்பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடும் போது, அனைவரின் கவனமும் பும்ராவின் பக்கமே இருக்கிறது.

அதில் ஆஸ்திரேலியா மண்ணில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வீரர் என்ற சாதனையை மிகவும் இளம் வயதிலேயே பும்ரா படைத்திருக்கிறார். இந்த டெஸ்ட் தொடரில் மட்டும் 3 போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். இவரின் பவுலிங்கை எதிர்கொள்ள முடியாததால், ஆஸ்திரேலியா தொடக்க வீரர் மெக்ஸ்வீனி அந்த அணியில் இருந்தே நீக்கப்பட்டிருக்கிறார்.
இதனால் பும்ராவை ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்களும் பாராட்டி தள்ளுகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலியா ஜாம்பவான் மைக் ஹசி பேசுகையில், 2014 ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடினேன். அப்போது தான் முதல்முறையாக பும்ராவை சந்தித்தேன். அவரை நெட்ஸில் எதிர்கொண்ட சம்பவம் இப்போதும் நினைவில் இருக்கிறது.
அவர் வீசிய பந்தை எதிர்கொள்ள என்னால் பேட்டை சரியான நேரத்தில் கொண்டு செல்ல முடியவில்லை. சில பந்துகள் என் கண்களுக்கே தெரியவில்லை. அவரின் பவுலிங் ஆக்ஷன் மிகவும் வித்தியாசமானதாக இருந்தது. அதனால் அவர் தேசிய அணிக்காக விளையாடுவார் என்று நினைக்கவில்லை. பவுலிங் செய்ய ஓடி வரும் போது, அவர் ரன் அப் கொஞ்சம் மோசமாகவும், தடுமாற்றத்துடனும் இருந்தது.
அப்போது யார் இந்த பையன் என்று சிந்தித்தேன். அப்போது அவரின் வேகத்தை திரும்பி பார்த்த போது, மணிக்கு 145 கிமீ என்று இருந்ததால் மிரண்டுவிட்டேன். இந்தியாவில் அவர் மீது ஏராளமான சந்தேகம் இருந்தது. அவரின் ரன் அப் மற்றும் ஆக்ஷன் இரண்டிற்கும் உடல் தாங்காது என்று கூறினர். அவரால் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட நிலைக்க முடியாது என்று கருதினார்கள்.
ஆனால் சில நாட்களிலேயே பும்ராவின் திறமையையும், அவரால் என்ன செய்ய முடியும் என்பதையும் தெரிந்து கொண்டேன். ஒருவேளை அவர் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விரும்பினால், நிச்சயம் சாதிப்பார் என்று நன்றாக தெரியும். இப்போது அவர் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். அவரின் வளர்ச்சியை பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது.
சாதாரண இளைஞராக இருந்து எங்களை அசரடித்து இன்று உலகின் தலைசிறந்த பவுலராக பும்ரா இருக்கிறார். இந்த பயணத்தை தொடக்கம் முதல் பார்த்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். 2018ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இந்திய அணிக்காக அறிமுகமான பும்ரா, இதுவரை 43 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 194 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.